தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை அடித்து விரட்டிய கர்நாடக அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ
Recommended Video
பெங்களூர்: உடன் நின்று செல்போனில் செல்ஃபி எடுத்த நபரை அடித்து போனை தள்ளி விட்டுள்ளார் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடக காங்கிரஸ் அரசில், மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். கிரானைட், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அடாவடிகளுக்கு பெயர் போனவர்.
காங்கிரசில், மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தபோதிலும், ஊழல் புகார்களால் முதலில் அமைச்சர் பதவி கிடைக்காத இவர், டெல்லி காங்கிரஸ் தலைமை லாபி மூலம், சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்து அமைச்சரவையில் சேர்ந்தவர்.
ராகுல் காந்தி நிகழ்ச்சி ஏற்பாடு
ஹொசபேட்டையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.கே.சிவகுமார் சென்றிருந்தார்.அப்போது அமைச்சருடன் செல்ஃபி எடுக்கலாமே என்ற ஆசையில் வாலிபர் ஒருவர் இவரின் அருகே வந்து மொபைல் போனில் செல்ஃபி எடுக்க முயன்றார்.
இரக்கமேயில்லை
அப்போது தாட்சண்யமே இல்லாமல் அந்த நபரின் கைகளை தட்டிவிட்டார். செல்போன் கீழே விழுந்ததால் அதை எடுப்பதற்காக அந்த நபர் பதற்றத்தோடு குனிந்து பார்த்தார். இதையடுத்து அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் செல்ல சைகை காட்டினார் டி.கே.சிவகுமார்.
வைரலான வீடியோ காட்சி
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி கர்நாடகா முழுக்க வைரலாகியுள்ளது. பெல்காமில் சில மாதங்கள் முன்பு நடைபெற்ற 'குழந்தைகள் உரிமை' நிகழ்ச்சியில் அமைச்சர் சிவகுமார், பங்கேற்றபோது, இதேபோல செயல்பட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே நிருபர்களிடம் பேசுவதற்காக சிவகுமார் நின்றிருந்தார். அப்போது, அவரது பின்னால் ஒரு கல்லூரி மாணவன் தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுக்க முற்பட்டார்.
மாணவருக்கு அடி
அப்போது எரிச்சலுற்ற சிவகுமார், திடீரென திரும்பி சட்டென அந்த மாணவன் கையை ஓங்கி அடித்துவிட்டார். இதனால் மாணவன் கையில் இருந்த போன் கீழே விழுந்து நொறுங்கியது. போனை எடுக்க மாணவன் ஓடிய நிலையில், எதுவுமே நடக்காததை போல பிரஸ் மீட்டை ஆரம்பித்தார் அமைச்சர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு பெரிய விஷயம் இல்லை என சிவகுமார் விளக்கம் அளித்தார்.