கர்நாடகா சட்டசபை தேர்தல்: ஓவைசி கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தை
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்குவதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மும்முரமாக இறங்கியுள்ளது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.
பகுஜன், என்சிபியுடன் கூட்டணி
இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3-வது அணியை உருவாக்கி வருகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம். ஏற்கனவே பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை அறிவித்திருக்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.
தாஜா செய்யும் பாஜக
தற்போது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் பேச்சுகளை நடத்தி வருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பிஜிஆர் சிந்தியா கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். இதனால் இப்போதே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கியான ஒக்கலிகா சமூகத்தின் மடங்களுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக வியூகத்தை செயல்படுத்தும் ஜேடிஎஸ்
மேலும் முஸ்லிம்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு செல்லக் கூடாது என நினைக்கிறது பாஜக. இதனால்தான் ஓவைஸி கட்சியை மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் சேர வைக்கிறது பாஜக எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உபியில் காங்கிரஸுக்கு செக்
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஓவைஸி கட்சி போட்டியிட்டது. அப்போதே காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் செல்வதைத் தடுக்கவே ஓவைஸி கட்சி போட்டியிடுவதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.