"பாவம்னு தான் தமிழகத்துக்கு தண்ணி கொடுத்தோம்.. மீண்டும் கொடுப்போம்னு எதிர்பார்க்காதீங்க"-சித்தராமையா
பெங்களூரு : "தமிழகத்தில் மழையின்றி வறண்ட சூழ்நிலை நிலவுவதை மனதில் வைத்து தான், கபினி அணையிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதே தவிர, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி அல்ல,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து, கடந்த மூன்று நாட்களாக, தமிழகத்துக்கு, 4,000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. மேலும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 4,476 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கபினி அணையில் இருந்து தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர், குருபுர சாந்த குமார் தலைமையில், மைசூரில் உள்ள நீர்ப்பாசன அலுவலகம் முன், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெங்களூரில், முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது...
தமிழகத்தில் மழையின்றி வறண்ட சூழ்நிலை நிலவுகிறது என்பதை மனதில் வைத்து தான், கபினி அணையிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதே தவிர, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி அல்ல.
எனினும், கர்நாடக விவசாயிகளின் நலனையும் நாங்கள் கவனிக்க வேண்டும். தற்போது, மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் தமிழகத்துக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.