காஷ்மீர் வெள்ளப் பகுதியில் இருந்து 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து 13 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு ராணுவம் வெளியேற்றி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, அந்த மாநிலத்தை வரலாறு காணாத அளவுக்கு புரட்டி போட்டுள்ளது. அங்கு திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அங்கு பாயும் சீனாப், தாவி, ரவி, ஜீலம் உள்ளிட்ட ஆறுகளும், அவற்றின் கிளை ஆறுகளும் மழை வெள்ளத்தால் கரைபுரண்டு ஓடுகின்றன. அனைத்து ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி தீவுகளாக காட்சியளிக்கின்றன.

2 ஆயிரம் கிராமங்கள் மூழ்கின
இந்த பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரத்துக்கு அதிகமான கிராமங்களும், ஏராளமான சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு பாலங்களும் உடைந்து காணப்படுவதால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இருளில் மூழ்கியது
மேலும் மின் கம்பங்கள், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. அங்கு தகவல் தொடர்பும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

160 பேர் பலி
இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்களை அறிய முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராணுவம் தீவிரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை ராணுவமும், விமானப்படையும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி 75 முதல் 100 வீரர்களை கொண்ட 184 குழுவினர் இந்த பணிகளில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர்.

13 ஆயிரம் பேர் வெளியேற்றம்
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக 29 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 180க்கும் மேற்பட்ட வீரர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

கூடுதல் பேரிடர் குழுக்கள்
இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மேலும் 100 படகுகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடுதலாக 5 பேரிடர் மீட்புக்குழுவினரும், மருத்துவ குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications