"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்"- அட்டாரி எல்லையில் கதறலுடன் வெளியேறிய பாகிஸ்தானியர்கள்!
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி எல்லை பெரும் சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக பெற்றோரை பிரிந்த பிள்ளைகள், பிள்ளைகளை தவிக்க விடும் பெற்றோர் என இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் சாரை சாரையாக உறவுகளை இந்திய மண்ணிலேயே விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள் 555)
இந்த திருக்குறளுக்கு கருணாநிதி எழுதிய உரை விளக்கம்: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்களது ஏவல் படையான பயங்கரவாத கும்பலை ஏவிவிட்டு இந்திய நிலத்தில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிர்களின் ரத்தம் குடிக்கச் செய்துள்ளனர். பாகிஸ்தான் கொடூர ஆட்சியாளர்களின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு விலையை கொடுத்துக் கொண்டிருப்பதும் பாகிஸ்தானிய மக்கள்தான்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்ற கெடு.
இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் என்பவர்கள், ஏதோ சுற்றுலாவுக்கு வந்தவர்கள் மட்டுமல்ல் அல்ல.. உற்றமும் சுற்றமுமாய் ரத்தமும் சதையுமாய் எல்லைகள் பிரித்தாலும் கூடி மகிழ்ந்த உறவுகளைப் பறிகொடுக்கும் பாகிஸ்தானியர்களும்தான் இதில் அடங்கும்.
பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி எல்லையில் கதறி அழும் உறவுகளின் காட்சிகளைப் பார்த்த பின்னராவது 'பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல்களின்' மனசாட்சி உலுக்கட்டும் என்பதாகவே இருக்கின்றன.
தந்தை பாகிஸ்தானி.. தாய் இந்தியர்.. மகன்/ மகளுக்கு வயது 14.. இந்திய அரசின் உத்தரவால் பெற்ற தாயை இந்திய நிலத்தில் விட்டுவிட்டு அப்பாவின் கை பிடித்து கதறியபடியே அட்டாரி எல்லையை கடக்கும் பிஞ்சுகள்..
எல்லை கடந்து வாழும் சொந்தங்களைப் பார்க்க 45 நாட்கள் விசாவில் வந்துவிட்டு பாதிப்பேரை கூட பார்க்காமல் பாகிஸ்தானுக்கே திரும்புகிறேனே.. வாழ்நாளில் இனி இவர்களை காண்போமா? என கதறி அழும் ரத்த உறவுகள்..
70 வயதில் ரத்த உறவுகளைத் தேடி இந்திய நிலத்துக்கு வந்து சிலரை மட்டும் பார்த்து பரவசப்பட்ட நிலையில் படுபாதக பயங்கரவாதிகளால் பாதியிலேயே விட்டுவிட்டு செல்லும் பெஷாவரின் முதியவர்..
எப்போதும் தாக்குதல்கள் நடக்கும் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இருந்து சொந்தங்களை தேடி வந்து வெறும் கையுடன் பாகிஸ்தான் திரும்பும் உறவுகள்..
இப்படி அட்டாரி எல்லையில் இருந்து விடைபெறுகிற ஒவ்வொரு கண்ணீரும் ஓராயிரம் கதைகளை சொல்கிறதே..நெஞ்சு கனக்க விம்மியபடியே இந்த காட்சிகளை எல்லாம் ஒரு கணம் அந்த பயங்கரவாத பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்த்திருந்தால், ஏவல் படையை ஏவிவிட்டிருக்க மாட்டார்கள்..
ஆம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்!












Click it and Unblock the Notifications