சிறப்பு அந்தஸ்து ரத்தா?.. வதந்திகளை நம்பாதீர்.. காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு ஆளுநர் வேண்டுகோள்
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதனால் காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டன.
ஆனால் இதை உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது , தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள். அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளாகும். 35 ஏ சட்டப்பிரிவை ரத்து செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.