லோக்சபா தேர்தலில் வாரணாசியில் தோற்றால்...மோடிக்கு கேஜ்ரிவால் சவால்!!
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் தோற்றுவிட்டால் குஜராத்துக்கு 'திரும்பி செல்ல' தயாரா? என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேஜ்ரிவால் வாரணாசி சென்றுள்ளார். அவர் வாரணாசி செல்லும் வழியில் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் 'ஏதோ' செய்ய திட்டமிட்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அதாவது தமது பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்திருந்தார் கேஜ்ரிவால். அதன் பின்னர் வாரணாசி சென்றடைந்த கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நரேந்திர மோடி வாரணாசியில் தோற்று, குஜராத்தில் வெற்றி பெற்றால் அவர் சொந்த மாநிலத்துக்கே திரும்பிச் செல்ல தயாரா? என்று சவால் விட்டிருக்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் கேஜ்ரிவால் பின்னர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பனாரஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுடனும் கேஜ்ரிவால் கலந்துரையாட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications