முல்லைப் பெரியாறு அணை - ஜனாதிபதி கருத்துருவை கேட்க வேண்டும் - கேரளா சட்டசபையில் தீர்மானம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்துருவை கேட்க வேண்டும் என்று கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் கேரளா அரசு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஆராய வேண்டும்; அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் சூழலியல் பாதிப்பு ஏற்படலாம்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்துருவைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸின் கருத்துகளுக்கும் இந்த தீர்மானத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் உம்மன்சாண்டி கொண்டுவந்த இத்தீர்மானம் ஒருமனதாக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் போது பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோச, முல்லைப் பெரியாறு விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்வோம் என்றார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவும் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்
கேரளா சார்பில் உச்சநீதிமன்ற குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் நீதிபதி தாமஸ் மீது சட்டசபை தீர்மானம் விமர்சனம்