சோலார் பேனல் வழக்கு... கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறை ஆஜரான முதல்வர் உம்மன்சாண்டி!
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் முதல்முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி 14 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார் முதல்வர் உம்மன் சாண்டி.
வீடுகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்களை சப்ளை செய்வதாக கூறி, கேரளாவில் ஏராளமானோரை ஒரு தனியார் நிறுவனம் ஏமாற்றியது. கடந்த 2013-ம் ஆண்டு வெடித்த இந்த ஊழல் தொடர்பாக, பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட அரசின் மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி மோசடியில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பரபரப்பை உண்டாக்கியது.
முதல்வர் அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோப்பன், ஜிக்குமோன் ஆகியோருக்கு சரிதா நாயருடனான தொடர்பு அம்பலமானது. இதனால், உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், சாட்சியங்களை சேகரித்து வருகிறது. இந்த வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில் முதல்வர் உம்மன் சாண்டியிடம் விசாரணை நடத்த இந்த கமிஷன் முடிவு செய்து, அவருக்கு ‘சம்மன்' அனுப்பியது.
அதை ஏற்று, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் விசாரணை கமிஷன் முன்பு நேற்று முன்தினம் காலையில் உம்மன் சாண்டி ஆஜரானார். அங்கு சாட்சியம் அளித்தார். அதையடுத்து, அவரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
அப்போது, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
‘உண்மை கண்டறியும் சோதனைக்கு என்ன அவசியம்? நான் உண்மையைத்தான் பேசுகிறேன். எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு செய்ததாக யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். என் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை,' என்று விசாரணை கமிஷன் முன்பு உம்மன் சாண்டி கூறினார்.
அவரிடம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய விசாரணை, நேற்று அதிகாலை முடிவடைந்தது. மொத்தம் 14 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.