கார் விபத்தில் சிக்கிய உம்மன்சாண்டி... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் - பாதுகாவலருக்கு காயம்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி பயணம் செய்த கார், எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சராகி வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உம்மன்சாண்டி காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடுவில் நேற்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்ட விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார் . பின்னர் இரவு தனது காரில் புதுப்பள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கானாகாரி அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கார் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் இருந்து வழுக்கிச் சென்ற கார், அருகில் இருந்த சிறிய வாய்க்காலில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உம்மன்சாண்டி காயமின்றி உயிர்தப்பினார். ஆனால், உம்மன் சாண்டிக்கு பாதுகாப்பாக காரில் இருந்த பாதுகாப்பு வீரர் காயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் உம்மன்சாண்டி பேசுகையில், ‘சீட் பெல்ட் அணிந்திருந்ததால், இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினேன்' எனத் தெரிவித்தார்.