கேரளா வெள்ளம்: கரம் கொடுக்கும் தமிழ்நாடு.. ரூ.5 கோடி நிதி உதவி அளிக்க முடிவு
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளுக்கு தமிழகம் சார்பாக ரூ. 5 கோடி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளுக்கு தமிழகம் சார்பாக ரூ .5 கோடி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு பெரிய அளவில் மழை பெய்கிறது.
இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. கேரளாவிற்கு 5 கோடி மீட்பு நிதி அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் மீட்பு பணிகளில் உதவுவதாகவும் கூறியுள்ளது.
சென்னையில் வெள்ளம் வந்த போது, கேரள அரசு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது. இதற்காக கேரளாவில் இருந்து அப்போது ஆட்கள் அனுப்பப்பட்டு இருந்தனர்.