கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் திடீர் ராஜினாமா!
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல் ஆளுநர்கள் மாற்றம் என்ற விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்தது. மத்திய உள்துறை செயலரே தொலைபேசியில் சில ஆளுநர்களை அழைத்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் இதுவரை உத்தரப்பிரதேசத்தின் பி.எல் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வினி குமார், மேற்கு வங்கத்தின் எம்.கே நாராயணன், கோவாவின் பிவி வான்சூ, மிசோரமின் வைக்கம் புருஷோத்தமன், மகாராஷ்டிராவின் சங்கரநாராயணன் ஆகியோர் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மிசோராம் ஆளுநராக இருந்த கமலாபெனிவால் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கேரளாவின் ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் தமது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கூறிவந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஷீலா தீட்சித் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அவர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இதனிடையே இன்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஷீலா தீட்சித். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications