கேரளாவில் அனைத்து பார்களும் மூடப்பட்டன.. இறுதி நேரத்தில் பரபரப்பான மது விற்பனை!
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் ஸ்டாக்குகளை விற்றுத் தீர்த்தனர் பார் உரிமையாளர்கள்.
கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான பார்களையும் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. மேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பார்களிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பார்களை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் பார் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கடைசி நாளன்று ஒரு பெக் மதுபானம் வாங்கினால், 3 பெக் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் கேரளாவிலுள்ள 312 பார்களிலும் கூட்டம் அலைமோதியது.
வருகிற 1ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பார் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், அரசின் திடீர் உத்தரவால் தங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பார்களை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications