காதல் முத்தப் போராட்டம்: கொச்சியில் போலீஸ் தடியடி
திருவனந்தபுரம்: கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தை தடுக்க வந்த சிவசேனா உள்பட பல்வேறு இயக்கத்தினரை போலீசார் தடியடி நடத்தியும், மிளகு ஸ்பிரே அடித்தும் விரட்டினர்.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர்கள் கட்டிபிடித்தும், முத்தமிட்டும் ஜாலியாக உள்ளதாக வெளியான வெளியான தகவலைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாஜக தொண்டர்கள் சில தினங்களுக்கு முன் அடித்து உடைத்தனர். இதனைக் கண்டித்து நவம்பர் 2ம் தேதி கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக சிலர் அறிவித்தனர். இதற்காக பேஸ்புக்கில் 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் ஆதரவு திரட்டினர். இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் இந்த போராட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று சிவசேனா உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் கூறின. இந்த போராட்டத்திற்கு அனுமதி தரமாட்டோம் என கொச்சி போலீசாரும் கூறினர். போலீசார் அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே முத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து கேரள போலீஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முத்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பு - தடியடி
அதையடுத்து கொச்சியில் நேற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது. கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் கமிஷனர் நிஷாந்தினி தலைமையில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை முன்கூட்டியே கைது செய்யவும் போலீசார் தீர்மானித்தனர். அதன்படி கொச்சி சட்டக் கல்லூரி சந்திப்பு அருகே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே மரைன் டிரைவ் பகுதியிலும் மேனகா சந்திப்பிலும் பெண்கள் ஏராளமானோர் வந்தனர். இது குறித்து அறிந்த சிவசேனா மற்றும் பல்வேறு இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அவர்களைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். தடியடி நடத்திய பின்னரும் முத்தப் போராட்டத்தை தடுக்க வந்தவர்கள் கலைந்து செல்லவில்லை. அதையடுத்து போலீசார் மிளகு ஸ்பிரே அடித்து விரட்டினர். இதற்கிடையே மரைன் டிரைவ் பகுதியில் 60 வயதுக்கும் மேலான முதியவர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு முத்தம் கொடுத்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருவனந்தபுரம் கனககுன்னு பகுதியிலும் சிலர் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனால் அதை மீறி சில இளம்பெண்களும், வாலிபர்களும் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.
ஹைதராபாத்திலும் காதல் முத்தப் போராட்டம்
ஹைதராபாதில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்கள் நேற்று மாலை காதல் முத்தப் போராட்டத்தை நடத்தினர். அப்போது இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
மேலும், இந்த போராட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மற்றும் ஏ.பி.வி.பி பிரிவினர் அங்கு கூடியதால் ஹைதராபாதின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.
ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் பக்கம்
இதற்கிடையில் காதல் முத்தப் போராட்டத்துக்கென்று தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.