பெண் ஐஏஎஸ் அதிகாரியை கரம் பிடித்த கேரளா எம்எல்ஏ... கல்யாணத்தில் முடிந்த காதல்
கேரள காங்கிரஸ் எம்எல்ஏவும், பெண் உதவி கலெக்டரும் காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன், பெண் உதவி ஆட்சியர் திவ்யாவின் காதல் கனிந்து இன்று குமரி மாவட்டம் தக்கலையில் கல்யாணத்தில் முடிந்துள்ளது.
கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன். என்ஜினீயரிங் படித்து விட்டு, மும்பையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ மற்றும் சபாநாயகராக இருந்த கார்த்திகேயன் உயிர் இழந்தார். அதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், அவரது மகன் சபரிநாதன் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2 முறை வெற்றி
இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சபரிநாதன் அருவிக்கரை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.இவரது தந்தை கார்த்திகேயன் சபாநாயகராக இருந்தவர்

அதிகாரியுடன் காதல்
சபரிநாதனுக்கும், திருவனந்தபுரத்தில் பெண் உதவி ஆட்சியராக பணியாற்றி வரும் ஜஏஎஸ் அதிகாரி திவ்யா ஐயருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இருவரின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு விரைவில் திருமணம் என்று சபரிநாதன் கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் சந்திப்பு
32 வயது திவ்யா ஐயர் வேலூர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்ததோடு, கோட்டயத்தில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியம், பாட்டு, நடனத்திலும் ஆர்வம் கொண்ட திவ்யாவும், சபரிநாதனும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இருவரும் சந்தித்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் தொலைபேசியில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தையடுத்து காதலாக மாறியது.

நட்பு காதலாக மாறியது
திருவனந்தபுரத்தில் ஒரு நாடக நிகழ்ச்சி அரங்கேற்றம் நடந்த போது நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டோம். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது, அதன் பின்பும் போனிலும் பேசினோம். இப்படியே இருந்த பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறியது. எங்கள் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் சபரிநாதன்.

கருத்து ஒற்றுமை
இருவரின் கருத்துகளும், ரசனையும் ஒத்து போனதால் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தோம், அது நிறைவேறியுள்ளது என்று திவ்யா மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அரசியல்வாதியை திருமணம் செய்து கொள்வது புதிதான விஷயம் அல்ல என்றும் திவ்யா ஐயர் கூறியுள்ளார்.

திருமண பந்தம்
குமரிமாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள குமாரசாமி கோவிலில் இன்று காலை இவர்களின் திருமணம் நடந்தது. கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைத்தளங்களிலும் இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications