மாட்டுக்கறியை ஒரு கைப்பார்த்துவிட்டு தீர்மானம் நிறைவேற்றிய சேட்டன்ஸ்!
கேரள எம்எல்ஏக்கள் மாட்டுக்கறியை ஒரு கைப்பார்த்துவிட்டு சட்டசபையில் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
திருவனந்தப்புரம்: மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை விடுதியில் மாட்டுக்கறியை சமைத்து சாப்பிட்டுவிட்டு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இதுதொடர்பாக விவாதிக்க கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் பினராய் விஜயன், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதிக்கப்பட்டது கேரளாவை மிகவும் மோசமாக பாதிக்கும். என்றார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு விதித்த கட்டுப்பாட்டுகள் தொடர்பாக சட்டசபையில் விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, சட்டசபை உணவு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு மாட்டிறைச்சி வறுவல் வழங்கப்பட்டு உள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கூட்டம் கூட்டப்படவுள்ளது என்று தெரிந்தவுடன் சட்ட சபை ஊழியர்கள் இன்று காலை 10 கிலோ மாட்டிறைச்சியை வாங்கி வந்து சமைத்துள்ளானர். விவாதத்திற்கு செல்லும் முன்னதாக பெருமளவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மாட்டுக்கறியை ஒரு வெட்டு வெட்டிவிட்டுதான் சென்றுள்ளனர்.