பக்தர் வேடத்தில் பிக்பாக்கெட்: தேனியை சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது
சபரிமலை: ஐயப்ப சுவாமி பக்தர் போல வேஷமணிந்து பக்தர்களிடமிருந்து பிக்பாக்கெட் அடித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது செய்யப்பட்டனர்.
சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறந்துள்ளதால், பக்தர்கள் இருமுடி கட்டி பல மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்த சீசனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் திருடவும் சில கும்பல்கள் தயாராகியுள்ளன.
தமிழகத்தின் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த கருப்பய்யா (44), செல்வம் (42), கண்மனி ராஜு (55) ஆகியோர் பக்தர் போல வேட்டி, மாலை அணிந்தபடி, உண்மையான பக்தர்கள் பணத்தை அபேஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து செல்லும் கூட்ட நெரிசலின்போது பிளேடை பயன்படுத்தி பக்தர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பது இவர்கள் பாணியாகும்.
இந்நிலையில் சபரிமலை அருகே இதுபோன்ற பிக்பாக்கெட்டில் இவர்கள் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் என்ற போர்வையில் பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் சுற்றுவதால் உஷாராக இருக்கும்படி பக்தர்களை கேரள காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.