கேரளாவில் பீட்சா, பர்கர், பாஸ்தா சாப்பிட்டா ‘கொழுப்பு வரி’ கட்டணும்! இது நிதியை உயர்த்தவாம்!!
திருவனந்தபுரம்: பர்கர், பீட்சா, டோனட்ஸ், சாண்ட்விட்ச்கள் மற்றும் பாஸ்தா ஆகியவற்றுக்கு 14.5% ‘கொழுப்பு வரி' விதித்துள்ளது கேரள மாநிலம். அம்மாநிலத்தில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கு கொழுப்பு வரி என்ற புதிய வரி வசூலிக்கப்பட உள்ளது. இந்த வரி 14.5 சதவீதம் வசூலிக்கப்பட உள்ளதாக கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பீட்சா, பர்கர், டாகோஸ், சான்ட்விச், பாஸ்தா போன்ற கொழுப்பு உணவுகளுக்கு வரி வசூலிக்கப்பட உள்ளது. மெக்டெனால்ட்ஸ், பிசா ஹட் போன்ற பாஸ்ட்புட்களுக்கும் இந்த புதிய வரி பொருந்தும்.
கேரள அரசு கடும் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் முக்கிய துறைகளை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் ஐடி பூங்காக்கள் அமைக்க ரூ.12,000 கோடி நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த கேரள நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வரிவிதிப்பு உள்பட பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஊழல் ஒழிப்பு, வர்த்தகர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆண்டுதோறும் 25 சதவீதம் வரை வரி வருமானத்தை பெருக்க முடியும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பல்வேறு துறைகளில் ரூ.1 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வருவாயை பெருக்க பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்டா போன்ற உணவுகளுக்கு 14.5 சதவீதமும் கொழுப்பு வரி விதிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும்.
வறுமை கோட்டுக்கு கீழ உள்ள குடும்பங்கள் மட்டும் பயனடைந்து வந்த இலவச ரேஷன் திட்டம் இனி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இதற்காக ரூ.300 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஜவுளிகள் மீதான வாட் வரி ஒரு சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அரசுக்கு கூடுதலாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறினார் நிதியமைச்சர் ஐசக்.
பீகார் மாநிலத்தில் வட மாநிலத்தவரின் விருப்ப உணவான சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு 13.5 சதவீத மதிப்பு கூட்டிய வரி விதித்து நிதிஷ் குமார் அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு கொழுப்பு வரி புதிது என்றாலும், டென்மார்க், ஹங்கேரி போன்ற நாடுகளில் இத்தகைய வரிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. டென்மார்க் நாட்டில் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீட்சா ஆகிய உணவுப்பொருட்களுக்கு கொழுப்பு வரி விதித்துள்ளது.
ஆனால் கேரளாவில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்டா உணவுகளுக்கு 14.5 சதவீதமும் கொழுப்பு வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பிற்கு மெக்டொனால்டு, பீட்சா விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும் இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ரூ.10 கோடி வரை அரசு கஜானாவுக்கு வருவாய் வரும் என ஆளும் புதிய இடதுசாரிகள் அரசு எதிர்பார்க்கிறது.