பெங்களூர் ஐ.டி. நிறுவன ஊழியர் பலாத்காரம்- கேரள ஹோட்டல் ஊழியர்கள் இருவரிடம் விசாரணை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உல்லாச விடுதியில் பெங்களூர் ஐடி நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அந்த விடுதி ஊழியர்கள் இருவரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள எல்லையான களியக்காவிளை அருகே பூவாறு பகுதி சுற்றுலா தலமாக மாறி வருகிறது. கேரள சுற்றுலாத்துறை சார்பில் இங்கு படகு சவாரி மற்றும் பயணிகள் ஆயுர்வேத மசாஜ் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இங்கு ஏராளமான உல்லாச விடுதிகள், லாட்ஜுக்கள், நட்சத்திர ஓட்டல்கள் உருவாகியுள்ளன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 28 பேர் இங்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பூவாறில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
இதில் சில பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 41 வயதான பெண் ஊழியர் ஒருவர் விடுதியில் உள்ள அறையில் தனியாக தங்கினார். இரவு நேரத்தில் 2 நபர்கள் இவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்தனர்.
இதுபற்றி அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உல்லாச விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், உல்லாச விடுதியில் பணிபுரிந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது. அந்த இரு சந்தேக நபர்களுக்கும் இன்று மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இப்பரிசோதனை முடிவில் பெண்ணை பலாத்காரம் செய்தது இவர்கள் தானா? என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications