டாய்லெட்டில் நாப்கின்... பெண் ஊழியர்களின் ஆடைகளைக் களைந்து சோதனை.. கொச்சியில்!
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டாய்லெட்டில் நாப்கினைப் போட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் கொண்டு போய் ஆடைகளைக் களைந்து நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாநில மகளிர் ஆணையமும் இன்த சோதனை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கொடுமையான சோதனையை அந்த நிறுவனத்தின் இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் நடத்தியுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொச்சியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அஸ்மா ரப்பர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான பெண் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிறுவனம் மீது அதில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், டிசம்பர் 10ம் தேதி எங்களது நிறுவனத்தின் டாய்லெட்டில் ஒரு பயன்படுத்தப்பட்ட நாப்கின் கிடந்துள்ளது. இதனால் கோபமடைந்த இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் யார் இதைப் போட்டது என்று பெண் ஊழியர்களை அழைத்துச் சப்தம் போட்டனர்.
ஆனால் யார் போட்டது என்று தெரியவில்லை. இதையடுத்து 50 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களை, மொத்தம் 45 பேர், ஒரு தனியறைக்கு அவர்கள் வரவழைத்தனர். அந்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த அறையில் வைத்து அனைத்துப் பெண்களையும் ஆடைகளை கழற்றச் சொல்லி அந்த இரு பெண் மேற்பார்வையாளர்களும் சோதனையிட்டனர்.
இந்த சோதனை எங்களுக்கு பெரும் மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடத்திய அந்த இரு பெண் மேற்பார்வையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகார் கொடுக்கபப்ட்ட நான்கு நாட்கள் கழித்தே திரிகக்ககரா காவல் நிலையம் அதை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த இரண்டு பெண் சூப்பர்வைசர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் லிஸ்ஸி ஜோஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications