தமிழகத்துக்கு எதிராக கேஸ் போட்டு கன்னட அமைப்புகளுக்கு ஐஸ் வைக்கும் கிரண் மஜூம்தார்
டெல்லி: பெங்களூரு மற்றும் அண்டை மாவட்டங்களின் குடிநீர் உரிமையை உச்சநீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். காவிரிப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வை அளிக்க வேண்டும் என்று பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
இரு மாநிலப் பிரச்சினையில் இதுபோன்ற மனுக்களை ஏற்கக் கூடாது என்று இன்று நடந்த விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றமும் இது இரு மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சினையாயிற்றே என்று கருத்து தெரிவித்தது. பின்னர் முக்கிய மனு செப்டம்பர் 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது கிரண் மஜும்தாரின் மனுவை ஏற்பதா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
பயோகான் நிறுவனரான கிரண் மஜூம்தார் பெங்களூரில் வசித்து வருகிறார். சமீபத்தில் காவிரி பந்த் குறித்து கருத்து தெரிவித்த அவருக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கன்னட அமைப்புகள், கர்நாடக கட்சிகளின் கண்டனத்துக்குள்ளானார் கிரண் மஜூம்தார்.
இந்த நிலையில் கிரண் மஜூம்தாரை தலைவராகவும், பிரபல மணிப்பால் குழுமத்தின் தலைவர் மோகன் தாஸ் பய்-யை துணைத் தலைவராகவும் கொண்ட பெங்களூரு அரசியல் நடவடிக்கை குழு என்னும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் தமிழகத்திற்கு, கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவதால் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் ஏற்கனவே 50 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பெங்களூரு நகருக்கு மட்டும் 19 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதனுடன் சுற்று வட்டார மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 26 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதால், பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் உரிமையை உறுதி செய்ய வேண்டும். இந்த மனுவை காவிரி தொடர்பான மற்ற மனுக்கள் உடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
கிரண் மஜூம்தார் சார்பில் ஷா சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நபாதே குறுக்கிட்டு, இது இரு மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சினை. எனவே இதுபோன்ற மனுக்கள் பொருத்தமற்றவை, செல்லத்தகாதவை. எனவே இதை ஏற்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.
அப்போது இரு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தீபக் மிஸ்கராவும், இது மாநில அரசுகளுக்கு இடையிலான வழக்கு. எனவே இந்த வழக்கில் உங்களையும் சேர்க்க முடியும் என்பது குறித்து அடுத்த விசாரணையின்போதுதான் (செப்டம்பர் 27ம் தேதி) பரிசீலிக்க முடியும் என்று கூறினார். இதையடுத்து அவர்களது மனு செப்டம்பர் 27ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வரும்போது விசாரிக்கப்படவுள்ளது.
கன்னட அமைப்புகளை ஐஸ் வைக்க கேஸா...!
கிரண் மஜூம்தார் போட்டுள்ள இந்த வழக்குக்கு பின்னணி இருக்கும் எனத் தெரிகிறது. காரணம் சமீபத்தில்தான் கன்னடர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் கிரண் மஜூம்தார். காவிரி விவகாரத்தில் கர்நாடகம் பந்த் நடத்தியது. அப்போது கிரண் தனது டிவிட்டர் பக்கத்தில் நம்ம ஊரின் பெயரை பேசாமல் "பந்த்"ளூரு என்று மாற்றி விடலாம் என்று கூறியிருந்தார்.
மேலும் இரு மாநில விவசாயிகளுக்கும் பலன் தராத பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் உற்பத்திதான் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் டிவிட்டரில் புகுந்து கிரண் மஜூம்தாரை திட்டித் தீர்த்து விட்டனர்.
கன்னட அமைப்பினரின் கடும் போராட்டம் காரணமாக தனது டிவிட்டை டெலிட் செய்து விட்டார் மஜூம்தார். இந்த நிலையில்தான் அவர் பெங்களூரு குடிநீர் உரிமையைக் காக்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.