"ஜே.எஸ்.பி." கட்சி அலுவலகத்தையே இழுத்து மூடினார் கிரண்குமார் ரெட்டி!!
ஹைதராபாத்: லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மண்ணைக் கவ்வியதால் தமது ஜெய் சமைக்ய ஆந்திரா கட்சியின் அலுவலகத்தை இழுத்துப் பூட்டியுள்ளார் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி.
ஒன்றுபட்ட ஆந்திராவின் கடைசி முதல்வராக பதவி வகித்தவர் கிரண்குமார் ரெட்டி. தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்கு கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்துப் பார்த்தார்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியைவிட்டே வெளியேறி ஜெய் சமைக்ய ஆந்திரா என்ற தனிக்கட்சி தொடங்கினார் கிரண்குமார். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அதிருப்தி வாக்குகள் தமக்கும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டார் கிரண்குமார் ரெட்டி.
ஆனால் சீமாந்திரா மக்களோ தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கே வாக்குகளைக் கொடுத்தனர். கிரண்குமார் ரெட்டியின் கட்சி போணியாகவில்லை.
இதனால் அவர் பாரதிய ஜனதாவில் விரைவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் பாஜகவில் அவரை இணைக்க சீமாந்திராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தாம் தொடங்கிய ஜெய் சமைக்ய ஆந்திரா என்ற புதிய கட்சியின் அலுவலகத்தை இழுத்து பூட்டுப் போட்டே மூடி வைத்திருக்கிறார் கிரண்குமார் ர்ரெட்டி.