"மேற்கு வங்க அரசின் தோல்வி!" கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம்! அரசு பதிலால் கோபமடைந்த ஐகோர்ட் நீதிபதி
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் அரங்கேறிய பலாத்காரத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், மருத்துவமனையைப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். இந்த விவகாரத்தில் மாநில அரசை மிகக் கடுமையாகச் சாடிய கொல்கத்தா ஐகோர்ட், இந்த வன்முறைச் சம்பவம் அரசு இயந்திரத்தின் முழுமையான தோல்வி என்று விமர்சித்தது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.9ம் தேதி இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறை: இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாகக் கொல்கத்தாவில் புதன்கிழமை இரவு நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அங்கே மருத்துவமனைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடினர். போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் மாநில அரசின் முழு தோல்வி என்று விமர்சித்து கொல்கத்தா ஐகோர்ட், மருத்துவனிற்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் மருத்துவமனையை மூட உத்தரவிட நேரிடம் என்றும் எச்சரித்தது. மேலும், இந்த திட்டமிடப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
"காப்பாத்துங்கனு போலீஸ் கெஞ்சுனாங்க.." கொல்கத்தா மருத்துவமனையில் வெடித்த வன்முறை! நர்ஸ் திக்திக்
ஐகோர்ட்: முன்னதாக இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் கூறியிருந்த நிலையில், இனியும் தாமதிக்க முடியாது என்று சொல்லி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குக் கொல்கத்தா ஐகோர்ட் மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு பதில்: இந்த வழக்கு விசாரணையின் போது மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "திடீரென மருத்துவமனை முன்பு சுமார் 7,000 பேர் திரண்டனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் தடுப்புகளை உடைத்தனர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்ட பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது. இதில் 15 போலீசார் காயமடைந்தனர். துணை கமிஷனருக்கு கூட ஏற்பட்டது. போலீஸ் வாகனம், எமெர்ஜென்சி ரூம் என அனைத்தையும் சேதப்படுத்தினர். ஆனால், குற்றம் நடந்த இடத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டோம்" என்றார்.
கோபம்: இருப்பினும், இதை ஏற்க மறுத்த கொல்கத்தா ஐகோர்ட், மருத்துவமனை நிர்வாகத்தையும் போலீசாரையும் கடுமையாகச் சாடியது. இவ்வளவு கொந்தளிப்பான நிலைமை இருப்பது தெரிந்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்று கொல்கத்தா ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. 7,000 பேர் கூடுவார்கள் என்பது போலீசாரின் உளவுப் பிரிவுக்குத் தெரியவில்லை என்று சொல்வது நம்பும்படி இல்லை என்றும் நீதிமன்றம் அதிருப்தியைத் தெரிவித்தது.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று பதிலளித்தது. இருப்பினும், அந்த வாதத்தையும் ஏற்க மறுத்த கொல்கத்தா ஐகோர்ட், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது இவ்வளவு பேர் கூடியது எப்படி என கேள்வி எழுப்பியது. அந்த பகுதியைச் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு போட்டு இருக்க வேண்டும் என்ற நீதிபதிகள், 7,000 பேர் திடீரென நடந்து எல்லாம் வர முடியாது என்றும் விமர்சித்தது.
அரசு இயந்திரம் தோல்வி: மேலும், இது அரசு இயந்திரத்தின் முழுமையான தோல்வி என்று சாடிய நீதிமன்றம், போலீசாரால் தங்களையே பாதுகாக்க முடியவில்லை என்றால் அங்குள்ள மருத்துவர்கள் எப்படி அச்சமின்றி பணியாற்றுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியது. மேலும், அங்குப் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கொல்கத்தா ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
அப்போது பெற்றோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, "குற்றம் நடந்த இடத்தில் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் சொல்கிறார்கள். உண்மையில் போலீசார் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒளிந்து கொண்டே இருந்தனர். குற்றம் நடந்த இடத்தில் சேதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை காரணம் இல்லை. போராட்டக்காரர்களின் தவறான புரிதலே காரணமாகும்.

வன்முறையாளர்கள் மூணாவது தளத்தைத் தேடினர்.. மூன்றாவது தளம் என்றால் பெங்காலியில் நான்காவது மாடி என்று அர்த்தம்.. அதுதான் குற்றம் நடந்த இடம்.. ஆனால், அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு இரண்டாவது மாடிக்குச் சென்று அடித்து நொறுக்கியுள்ளனர். இதன் காரணமாகவே குற்றம் நடந்த இடத்தில் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. உண்மையில் அரசு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டது. போலீசாரால் மருத்துவமனையைக் காப்பாற்ற முடியவில்லை என்பதே உண்மை" என்றார்.
சரமாரி கேள்வி: மேலும், குற்றம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதியில் சாட்சிகளை அழிக்கும் வகையில் அவசர அவசரமாகப் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் இது முன்பே திட்டமிடப்பட்ட வேலை என்றும் இதற்கும் குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியது. இதைக் கேட்டதும் டென்ஷனான நீதிபதி, "இப்போது என்ன அவசரம்.. இங்கே பல மாவட்ட நீதிமன்றங்களில் பெண்கள் கழிப்பிடம் கூட இல்லை.. அங்கெல்லாம் பொதுப்பணித் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது.
இதேபோல செய்து கொண்டு இருந்தால் நாங்கள் மருத்துவமனையை மூடிவிடுவோம்.. அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி இருக்கும். அங்கே எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பினர். அப்போது மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பதாகவும் இடமாற்றம் செய்யத் தேவையில்லை என்றும் உறுதியளித்தது. கடைசியாக இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ரிபோர்ட்டை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.












Click it and Unblock the Notifications