கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜினாமா கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா கேஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து நள்ளிரவிலும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் பயிற்சி மருத்துவர் படுகொலையை மேற்கு வங்க மாநில அரசு, ஆர்ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் கையாண்ட முறை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மருத்துவ மாணவர்களின் இடைவிடாத உக்கிரமான போராட்டத்தால் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. பயிற்சி மருத்துவர் படுகொலையின் போது மருத்துவகல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்; கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத் கோயல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆர்ஜி கர் மருத்துவமனை சம்பவம் நடைபெற்ற முதல் நாளில் இருந்தே கொல்கத்தா போலீசார் அணுகுமுறை மோசமானது; ஆகையால் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி ஜூனியர் மருத்துவர்கள் நேற்று பிற்பகலில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் லால் பஜார் பகுதியில் இந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்ற வேண்டும் என ஜூனியர் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதனை போலீசார் ஏற்க மறுத்ததால் நடு சாலையில் அப்படியே அமர்ந்து போராட்டம் நடத்தினர் ஜூனியர் மருத்துவர்கள். அவர்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரணியாக வந்து மருத்துவ மாணவர்கள் இணைந்து கொண்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய இந்தப் போராட்டம் தொடர்ந்ததால் கொல்கத்தா நகரில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications