மேற்கு வங்கம்: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி 7 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி இன்று முதல் 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை ஏற்கனவே சூறையாடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்தை விசாரித்த மாநில காவல்துறை சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் மற்றும் படுகொலை சம்பவத்தை மேற்கு வங்க மாநில காவல்துறை மூடி மறைக்க பார்த்தது, இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, பயிற்சி மருத்துவர்களுக்கு அதிக நெருக்கடிகள் கொடுப்பது உள்ளிட்டவைகளை முன்வைத்து பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு அம்மாநில போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications