கொடுமையிலும் இது பெருங்கொடுமை.. கொல்கத்தா டாக்டருக்கு நியாயம் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த நிலைமை
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மருத்துவருக்காக பல்வேறு தரப்பில் இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம், ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் சீண்டிலில் ஈடுபட்ட அதிர்ச்சி நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தினசரி பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மறுபக்கம் மருத்துவர்களின் போராட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
கொல்கத்தா மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு, 'அம்ரோ திலோத்தமா’ என்ற அமைப்பினர் சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
'தேசியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அங்கிருந்த ஆண் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இத்தனைக்கும் போராட்டம், எஸ்பிளனேட் என்ற பகுதியில் நடந்தது. அது கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் முக்கியமான பகுதி. அங்கு அந்த நபர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் அநாகரீமாக நடந்து கொண்டது அங்கிருந்தோரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
உடனடியாக போராட்டக்காரர்கள், அந்த நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் காவல்துறை அந்த நபரை விடுவித்துவிட்டது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. உடனடியாக அவர்கள் அருகில் இருந்த காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்ட நபருடன், அவரைக் காப்பாற்றிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், “இவ்வளவு பெரிய கூட்டத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எங்குதான் செல்வார்கள்.” என்று வேதனைப்பட்டனர்.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையினர் கூறுகையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.












Click it and Unblock the Notifications