கே.ஆர்.எஸ் அணை நிரம்பியதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி பிரச்சனை வராது: சித்தராமையா
பெங்களூர்: கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை நேற்று எட்டியது.
இதைத்தொடர்ந்து, அணையில் சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது. இதில், முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு, சிறப்பு பூஜையை செய்தார். முறத்தில் நவதானியங்கள், வஸ்திரம், சந்தனம், மஞ்சள், குங்குமம், பூ, தேங்காய், பழம் ஆகிய மங்கல பொருட்களை வைத்து இன்னொரு முறத்தால் அதை மூடி கட்டி, மொத்தம் அதுபோன்று 20 கட்டுகளை கட்டி காவிரி நீரில் சமர்ப்பித்து சமர்ப்பண பூஜை செய்தார்.

‘நல்ல மழை பெய்து அணை நிரம்பட்டும், பயிர் செழித்து விவசாயிகள், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழட்டும்' என்ற ஐதீகத்தில் இந்த சிறப்பு பூஜை செலுத்தும் முறை பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நம்பிக்கையில் அணையில் நேற்று சமர்ப்பண பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும் சித்தராமையா பூஜை செய்தார்.
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது:
கர்நாடகத்தில் நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.13 ஆயிரம் கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் பெரிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், சிறிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியும் செலவு செய்யப்படுகிறது. இதுதவிர கால்வாய்கள், ஏரிகள், குளங்களை புனரமைத்து, குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான நீர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மழை சரிவர பெய்யவில்லை. இதனால் மக்கள் வருத்தம் அடைந்தனர். இந்த ஆண்டு கே.ஆர்.எஸ். அணை நிரம்புமா? பூஜை செய்ய முடியுமா? என்று எனது மனதிலும் கேள்வி எழுந்தது. மழை சரிவர பெய்யாததால் கவலையில் இருந்தேன். ஆனால், ஜூலை மாதம் 10ம் தேதிக்கு மழை பெய்ய தொடங்கி, அனைத்து அணைகளும் படிப்படியாக நிரம்பி உள்ளன.

இதனால், இந்த ஆண்டு விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. மேலும் தமிழகத்துக்கும், நமக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது. கடந்த ஆண்டு காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை காட்டிலும் கூடுதலாக 68 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் பிரச்சினை ஏற்படாது.
அணை நிரம்பி உள்ளதால் உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. விவசாய பணிகளுக்காக கால்வாய்களில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி எப்போதும் நிரம்பி வழிந்தால், விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த பிரச்சினையும் ஏற்படாது. எப்போதும், இதுபோன்று காவிரி நிரம்பி வழியட்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழட்டும். இதற்காக காவிரி தாயை வணங்கி வேண்டுகிறேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.












Click it and Unblock the Notifications