ஹிஹிஹிஹிஹிஹி.... மனதுக்கு இதமளிக்கும் சிரிப்பு பல்கலைக்கழகம்... உலகிலேயே முதல்முறையாக கர்நாடகாவில்!
மனதுக்கு இதமளிக்கும் புன்னகையை அளிக்கும் சிரிப்பு பல்கலைக்கழகம் உலகிலேயே முதல்முறையாக கர்நாடகா மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது.
பெங்களூர்: உலகிலேயே முதல்முறையாக சிரிப்பு பல்கலைக்கழகம் பெங்களூருவில் நிறுவப்படவுள்ளது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பன பழமொழிகள். இவை சிரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
யோகா செய்வது உடல் நலத்துக்கு நன்மை கொடுக்கும். ஆனால் மனதுக்கு அமைதியை கொடுப்பது, சிரிப்பு மட்டுமே. அதனால்தான் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்கின்றனர்.

எள்ளி நகையாடக் கூடாது
அதேநேரத்தில் சிரிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை கிண்டல் செய்தோ, அவர்களை துன்புறுத்தியோ சிரிக்கக் கூடாது என்று திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறியுள்ளார். எனவே நாம் நகைக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது.

சிரிப்பதால் என்ன பயன்
அகம் மகிழ்ந��து சிரிப்பதால் நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக ஓடும். தசைகள் வலுபெறும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை அண்டவே அண்டாது. சரி விஷயத்துக்கு வருவோம். சிரிப்பதற்காகவே உலகில் முதல்முதலாக பல்கலைக்கழகம் உள்ளது என்றால் நம்புவீர்களா?

கர்நாடகாவில் இன்னும் 2 ஆண்டுகளில்...
ஆம். கர்நாடகாவில் பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்பு பல்கலைக்கழகம் அமைகிறது. 65 நாடுகளை சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் இணைந்து அமைக்கும் இந்த பல்கலைக்கழகம் இன்னும் இரண்டாண்டுகளில் செயல்பட தொடங்கும். நம் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அதை பிறருக்கு வெளிப்படுத்தாத வகையில் நம் உள்ளம் மகிழ்ந்து சிரிக்கும் சிரிப்பு பயன்படுகிறது. இதை கருத்தில் கொண்டு உலகில் பல நாடுகளில் சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகிறது.

மாநகரங்களில் இயந்திர வாழ்க்கை
சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் வாழும் மக்கள் தினமும் இயந்திரமயமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்க சிரிப்பு மன்றங்கள் உதவியாக இருக்கிறது. இதனால் கடந்த மாதம் 65 நாடுகளை சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் பெங்களூரில் கூடினர். அப்போது சிரிப்பு கலையை ஊக்கப்படுத்த தனி பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

எங்கே பல்கலை
சிக்பள்ளாபுரா நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிந்துபூர் சாலையில் 15 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழகம் அமைகிறது. புதியதாக அமைக்கப்படும் பல்கலைக்கழக வளாகத்தில் மண் குடிசை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடிசையிலும் சிரிப்பு குறித்து தனித்தனியாக வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை ஒருமுறை சுற்றி வந்தாலே போதும் தானாக சிரிப்பு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

40 ஆசிரியர்கள்
20 வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது. நகைச்சுவை தொடர்பாக பாடம் நடத்த 40 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையும் வகுப்புகள் நடத்தப்படும். முடிவு செய்யப்பட்ட இடத்தில் இன்னும் சில மாதங்களில் கட்டுமான பணி தொடங்கி, வரும் 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவுறும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாரின் ஒத்துழைப்பு பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications