இன்குலாப் ஜிந்தாப் டூ பாரத் மாதா கீஜே.. மே.வங்கத்தில் இடதுசாரிகளின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது!
கொல்கத்தா: இடதுசாரிகளின் கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்த மேற்குவங்கத்தில் அவர்களது இறுதி அத்தியாயத்தை தற்போதைய லோக்சபா தேர்தல் எழுதிக் கொண்டிருக்கிறதே என்கிற அச்சத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களே பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இடதுசாரிகள் ஆட்சி அதிகாரம் மேற்கு வங்கத்தில் கொடி கட்டிப் பறந்தது ஒரு காலம். கால் நூற்றாண்டு காலம் ஆட்சிக் கட்டிலைவிட்டு எந்த கட்சியாலும் இடதுசாரிகளை அசைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது.
காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய மமதாவின் புயல் இந்த இடதுசாரிகளின் கோட்டையை சுக்கு நூறாக தகர்த்தது. எழுந்திருக்கவே முடியாத மரண அடியோடுதான் கடந்த சில ஆண்டுகளாக தேர்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர் இடதுசாரிகள்.
மணி அடித்த மாணிக் சர்க்கார்!
ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் இடதுசாரிகள் போட்டுக் கொண்டே வரும் முகமூடிகள் அவர்களது எதிர்காலம் சூனியமாகப் போகிறது என்பதை அப்பட்டமாக உணர்த்துகிறது. இதைத்தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், திரிணாமுல் காங்கிரஸிடம் இருந்து மேற்கு வங்கத்தை விடுதலை செய்ய வேண்டும்தான்.. அதற்காக நாம் பாஜகவை தேர்வு செய்யக் கூடாது. அது நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும் என கூறியுள்ளார்.
பாஜகவினராக மாறும் இடதுசாரிகள்
ஆம்.. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கப் போகும் ஒவ்வொரு வெற்றி நகர்வும் இடதுசாரிகளின் பேரன்பிலும் பெரும் அரவணைப்பிலும்... அம்மாநிலத்தில் பெரும்பான்மையான இடதுசாரிகளின் முழக்கம் பாரத் மாதா கீ ஜே என்பதுதான்... லால் சலாம் என்றும் இன்குலாப் ஜிந்தாபாத் என்றும் கையில் செங்கொடி உயர்த்தி உணர்வு பொங்க முழங்கிய அதே இடதுசாரிகள் இன்று காவி ஏடி ஏந்தி பாரத் மாதா கீ ஜெ என கூவுகின்ற பரிதாபத்தைப் பார்க்க முடிகிறது.
பாஜகவுக்கு இடதுகள் வாக்களிப்பு
இடதுசாரிகளின் வேட்பாளர்களே பாஜகவின் வேட்பாளர்களாக இருக்கிறார்கள்... இடதுசாரி தொண்டர்களே, ஆம் நாங்கள் இடதுசாரிகள்தான்.. ஆனால் இம்முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். அதற்காகவே பாஜகவை தேர்ந்தெடுக்கிறோம் என பகிரங்கமாகப் பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றோர் பதறுகிறார்கள்.
இறுதி அத்தியாத்தை எழுதும் இடதுசாரிகள்
இடதுசாரிகளின் இன்னொரு கோட்டையான திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. காலத்தின் கோலம்.. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளே பாஜகவினராக உருமாறி தங்களை அறியாமலே தங்களை அழித்துக் கொண்டு அம்மாநிலத்தில் இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
அந்தோ பரிதாபம்!!