மும்பை ஐ.ஐ.டி வளாகத்தைச் சுற்றிப் பார்த்த ‘சிறுத்தை’.... மாணவர்கள் பீதி!
மும்பையின் கிழக்கு அந்தேரி அருகிலுள்ள போவாய் பகுதியில் உள்ளது ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம். வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த மக்கள் தொடர்பு அலுவலர் ராஸ்மி உதயகுமார், கல்லூரி வளாகத்திற்கு அருகே உள்ள மெட்டலர்ஜி துறை கட்டிடத்தில் சிறுத்தை புலி ஒன்று திரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக வனத்துறையினருக்கு அவர் தகவல் அளித்தார்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஐ.ஐ.டியில் இருந்த அனைத்து அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சிறுத்தை மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சிறுத்தை கல்லூரி வளாகத்திற்குள் தான் மறைந்துள்ளதாக அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கருதுகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் முளுந்த் பகுதியிலுள்ள வார்லிபாடா குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது குறிப்பிடத்தக்கது.