தேசிய கொடியின் 4 வண்ணங்களுக்கேற்ப 4 துறைகளில் புரட்சியை உருவாக்குவோம்: பிரதமர் மோடி
பெங்களூர்: நாட்டின் தேசியக் கொடியில் இருக்கும் நான்கு வண்ணங்களுக்கேற்ப 4 பிரதான துறைகளில் புரட்சியை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொருநாளும் ஊழலைப் பற்றிய செய்திகளே ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.

வெளிநாட்டினர் பார்வையில் இந்தியாவின் நிலை இன்று மாறி இருக்கிறது.. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க மீது மக்கள் நம்பிக்கை வைத்து பெரும்பான்மையை அளித்துள்ளனர்.
கடந்த 10 மாத அனுபவத்தில் இந்தியா பின் தங்கி இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்பதை அறிந்து கொண்டோம். எங்கள் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தாலும் நாங்கள் நீண்டகாலமாக செய்ததையே செய்கிறோம்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசுக்கும் எங்களுக்குமான கொள்கைகள் ஒன்றாக இருந்தாலும் எங்கள் நோக்கம் வேறு. ஐக்கிய முற்போக்கு அரசின் நோக்கம் சரியானதாக இருக்கவில்லை.
உங்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்த 10 மாதங்களில் ஆண்டுக்கணக்கில் திட்டங்கள் தேங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.
எங்கள் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் விரைந்து முடிவெடுத்துக் கொண்டிருக்கிறது. எமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்தான் கருப்புப் பண மீட்புக்கான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தோம்.
ஆனால் நடைமுறை உண்மையை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கருப்பு பணம் குறித்து விமர்சித்தார்கள். நாங்கள் கருப்புப் பணம் குறித்து பிற நாடுகளின் உதவியை கேட்டுள்ளோம். அதை அந்த நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

கருப்புப் பண விவகாரத்தில் எங்களது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது ஜி 20 மாநாடு. குறிப்பாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதி அமைச்சர் பேசிய பின்னர் கருப்பு பணம் குறித்த கேலிகள் ஓய்ந்து போயின. எங்களை விமர்சித்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
கருப்புப் பணம் எப்போது வரும் என்று கேட்டவர்கள் எங்களின் செயல்பாடுகளை தெரிந்து அமைதியாகினர். இதோ நாங்கள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ1 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளோம்.
தேர்தலின் போது நிலக்கரி முறைகேடு பற்றி நாங்கள் பேசியபோது கேலி செய்தனர்.. நிலக்கரி சுரங்கத்தில் நாங்கள் கை வைத்து இப்போது அதை தங்கமாக வைரமாக்கியிருக்கிறோம்.
20 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டு சுமார் ரூ2 லட்சம் கோடி வருவாய் ஈட்டியிருக்கிறோம். முதல் முறையாக வித்தியாசமான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது நாங்கள்.
முன்பெல்லாம் எம்.பிக்களின் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில்தான் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறையோ நாங்கள் சாமானியர்களுக்காக தொலைநோக்குடன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.
எங்களின் கனவு டிஜிட்டல் இந்தியாதான். நாங்கள் நாட்டை 'மொபைல்' நிர்வாகத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம்.
நமது நாட்டில் மக்கள் தொகையைவிட மொபைல் போன்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எங்கே மொபைல் மூலமான அரசு நிர்வாகம் இருக்கிறதோ அங்கே நிச்சயம் நல்ல அரசு நடைபெறும்.
அதேபோல நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களை நாங்கள் சம பங்காளிகளாக கருதுகிறோம். அனைத்து மாநிலங்களுமே சம வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை.
இந்தியா மேம்பாடு அடையும் போது நமது அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும். 13வது நிதி கமிஷன் பரிந்துரையால் கர்நாடகாவுக்கு ரூ14 ஆயிரம் கோடியில் இருந்து ரூ25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு கிடைக்க உள்ளது.
நாட்டில் கிராமங்களும் விவசாயிகளும் முன்னேறாவிட்டால் நாம் முன்னேற முடியாது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக தொழில்நுட்படங்களை பயன்படுத்த வேண்டும்,
விவசாயிகளுக்கு தேவை சாலை வசதிகள், தண்ணீர், 24 மணி நேர மின்சாரம்..இதை நாம் செய்தாக வேண்டும். பிள்ளைகளின் வேலைகளுக்காக லஞ்சம் கொடுப்பதற்காக நிலத்தை விவசாயிகள் விற்றாக வேண்டிய நிலைமையை பார்த்திருக்கிறேன்.
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து ஏழை விவசாயிகளின் வேதனையை நான் அனுபவித்துப் பார்த்தவன். விவசாயிகளின் நிலம் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் அவசியம்.
விவசாயிகள் பயனடையும் வகையில் நில சட்ட சீர்திருத்தம் தேவை. ஆனால் அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைத்து விவசாயிகளை அரசியல் கட்சிகள் ஏமாற்றுகின்றன.
நமது நாட்டின் தேசிய கொடியில் இருக்கும் நான்கு நிறங்களுக்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புரட்சி ஏற்பட வேண்டும்.
தேசியக் கொடியில் உள்ள 4 நிறங்களின் அடிப்படையில் 4 புரட்சிகள் ஏற்பட வேண்டும். தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறத்துக்கு ஏற்ப வேளாண் புரட்சி; வெண்மை நிறத்துக்கேற்ப வெண்மை புரட்சி; எரிசக்தி துறைக்காக காவி புரட்சி; கடல்சார் வளங்களை வென்றெடுக்க நீலப் புரட்சி அவசியம்.
நாம் மேக் இன் இந்தியா மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்; மேக் இன் இந்தியா மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்போம்.
நமது நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம்; மேக் இன் இந்தியா மூலம் பாதுகாப்பு தளவாடத்தை இந்தியாவிலேயே தயாரிப்போம்.
நாம் சாதாரணமாக ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல ரூ10 செலவாகிறது.. ஆனால் நமது மங்கள்யான் உருவாக்க 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ7 தான் செலவாகும்.
நாங்கள் ஏழைகளுக்கு நேரடி சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் கிடைப்பதை உறுதி செய்தோம். சமையல் எரிவாயு மானியம் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்தோம்.
ஏழைகளைப் பற்றி யாரும் கவலைப்படாத நிலையில் நாங்கள் அக்கறை கொண்டோம். உயர் பதவிகளில் இருக்கிறவர்கள் உங்களுக்கு மானியம் தேவையில்லை என்கிற போது அதை விட்டுக் கொடுக்கலாம்.. அதன் மூலம் ஏழைகள் பயனடைவர்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications