முதல்வராக இருந்து கொண்டு நீதிமன்றம் வரலாமா?- ஆதார் வழக்கில் மம்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: ஆதார் எண்ணை செல்போனுக்கு இணைப்பது கட்டாயமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, செல்போன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்பி, இணைப்பை துரிதப்படுத்த கேட்டு வருகின்றன.
வரும் மார்ச் மாதத்திற்குள் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் போன மம்தா
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார். ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைப்பது அந்தரங்க உரிமையை மீறிய செயல் என்பது அவர் வாதம்.
மாநில முதல்வர் வர முடியாது
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மம்தா பானர்ஜி ஒரு மாநில முதல்வராக இப்படி வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்தனர். அரசியல் சாசன சட்டப்பிரிவு 32ன் கீழ், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை மாநில முதல்வர் எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்பதை நீதிமன்றம் சுட்டிக் காட்டி கண்டித்தது.
நோட்டீஸ்
அதேநேரம், மம்தா பானர்ஜி, தனிப்பட்ட ஒரு நபர் என்ற அடிப்படையில் வழக்கை தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்குமாறு, மத்திய அரசு, செலல்போன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மம்தா உறுதி
முன்னதாக, ஆதார் அடையாள எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைப்பது தனது அந்தரங்க உரிமையை மீறும் செயல் என கூறியிருந்தார் மம்தா பானர்ஜி. இதற்கு தான் ஒத்துழைக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை என்று, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து, மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.