குழந்தைகள் பார்க்க வேண்டாம்.. அடையாளம் காண்பதற்காக ரயில் விபத்தில் பலியானோரின் படங்கள் வெளியீடு!
புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூர் - ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதில், அருகில் உள்ள தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயிலின் மீது பெட்டிகள் எகிறி விழுந்தன.
இந்த பயங்கர விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே http://ser.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவர்களின் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் உறவினர்கள் இந்த புகைப்படத்தை பார்த்தால் உடல்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் யாவும் அவர்கள் இறந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் அதைப் பார்க்கும் போது அந்த விபத்தின் கோரம் கண் முன்னால் தெரிகிறது.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியல் மற்றும் புகைப்படங்கள் பின்வரும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறந்த பயணிகளின் பட்டியல்கள் மற்றும் புகைப்படங்கள், அவர்களின் உறவினர்கள் அடையாளம் காண வசதியாக மேற்கண்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில டிஸ்க்கிளெய்மர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலசோர் ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள் அடையாளம் காண வசதியாக மட்டுமே வெளியிடப்படுகின்றன. விபத்தின் தன்மையைப் பார்க்கும்போது, இந்தப் புகைப்படங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும். குழந்தைகள் இந்தப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஊடகம்/தனிநபர்/நிறுவனங்கள் என யாரும் ஒடிசாவின் சிறப்பு நிவாரண ஆணையரின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்த நோக்கத்திற்காகவும் இந்தப் புகைப்படங்களை மீண்டும் உருவாக்கவோ/வெளியிடவோ & பயன்படுத்தவோ கூடாது.
புவனேஸ்வரில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. புகைப்படங்களை அடையாளம் கண்டு உறவினர்கள் அங்கு வந்தால், அங்கிருந்து, வாகனங்கள் மூலம் மருத்துவமனை அல்லது பிணவறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கு வசதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
BMC ஹெல்ப்லைன் எண் 1929
உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் :
1. கட்டாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம் & SCB மருத்துவக் கல்லூரி.
2. புவனேஸ்வர் ரயில் நிலையம், பாரமுண்டா பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையம்.












Click it and Unblock the Notifications