ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு அடி- ஆட்சியை அசால்ட்டாக கைப்பற்றும் காங்கிரஸ்- Lok Poll பரபர சர்வே!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 20 முதல் 29 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது; காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு ஆளும் பாஜகவுக்கு பெரும் கலக்கத்தையும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவை 46 தொகுதிகள். ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்ற பாஜகவுடன் 10 இடங்களில் வென்ற ஜனநாயக் ஜனதா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. நான்கரை ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சி வெளியேறியது. அத்துடன் அக்கட்சியின் 10 எம்.எல்.ஏக்களில் 7 பேர் ராஜினாமா செய்துவிட்டு பாஜக, காங்கிரஸில் இணைந்துவிட்டனர்.
தற்போதைய தேர்தலில் பாஜக , காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக் ஜனதா கட்சி- ஆசாத் கட்சி கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான Lok Poll கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக மொத்தம் 67,500 பேரிடம் Lok Poll நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதன் முடிவுகள்:

பாஜக 20 முதல் 29 இடங்கள் (35%- 37% வாக்குகள்)
காங்கிரஸ் 58 முதல் 65 இடங்கள் (46%-48% வாக்குகள்)
இதர கட்சிகள் -3 முதல் 5 இடங்கள் (7% முதல் 8% வாக்குகள்)
எந்த முடிவையும் எடுக்காதவர்கள்- 9%
லோக்போல் சர்வே முடிவுகள் ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு பேரதிர்ச்சியையும் காங்கிரஸுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications