மமதாவுடன் மீண்டும் பேச்சு? நான் பாஜகவுக்கு ஓடுவேன்.. காங்கிரஸை மிரட்டும் ’தல’ ஆதிர் ரஞ்சன் சவுத்ரி!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில காங்கிரஸ் தலைவரும் லோக்சபா கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணையக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது "இந்தியா" கூட்டணி. இந்தக் கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவிவிட்டார். இதனால் "இந்தியா" கூட்டணியின் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியானது.

திடீர் சலசலப்பு: மேலும் லோக்சபா தேர்தல் தொகுதி உடன்பாடு விவகாரத்தில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி கட்சி என அத்தனை "இந்தியா" கூட்டணி கட்சிகளுடனும் காங்கிரஸ் முரண்பட்டது. இதனால் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 'இந்தியா' கூட்டணியில் மட்டும் இருப்போம் என்கிற நிலைப்பாட்டை மமதா முதலில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மியும் அறிவித்தது. ஒருகட்டத்தில் அகிலேஷ் யாதவும் இதே நிலைப்பாட்டை எடுக்க முன்வந்தார்.
அதிரி புதிரி தொகுதி பங்கீடு: இந்த நிலையில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திரைமறைவில் பல்வேறு சமாதான முயற்சிகளை முன்னெடுக்க இப்போது காங்கிரஸுடனான தொகுதி உடன்பாடுகள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் இடையேயும் சுமூகமான தொகுதி பங்கீடு உருவாகிவிட்டது.
மமதா கட்சியுடன் மீண்டும் பேச்சு: இதேபோல மேற்கு வங்கத்தில் மீண்டும் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 5 லோக்சபா தொகுதிகளை மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: முன்னதாக மமதா பானர்ஜியை மிக கடுமையாக விமர்சித்தவர் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. லோக்சபா காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இருப்பவர். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர். மமதா பானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிதான் தர முடியும் என்ற போது நீங்க ஒன்னும் எங்களுக்கு பிச்சை எல்லாம் போட வேண்டாம்; எங்க தயவால்தான் அன்று இடதுசாரிகளை ஒழித்து ஆட்சியையே பிடித்தீர்கள்.. எங்களுக்கா பிச்சை போடுகிறீர்கள்? என பொங்கியவர். தற்போது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸிடையே மீண்டும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறாராம்.
பாஜகவுக்கு ஓடுவேன் என மிரட்டல்: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு பாஜகவை எதிர்கொள்ளும் என நம்பிக்கையுடன் பேட்டிகளை கொடுத்தவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. ஆனால் மமதா பானர்ஜி மீதான கோபத்தால் தற்போது, திரிணாமுல் காங்கிரஸுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை துளியும் விரும்பவில்லையாம். இதனை பாஜக பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கிவிட்டதாம். மமதாவை வீழ்த்த மேற்கு வங்கத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வளைக்கலாம் என்பது பாஜகவின் திட்டமாம். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மமதாவின் வலது, இடதுகரங்களை வளைத்துப் போட்டுதான் பாஜக அங்கே காலூன்றி நிற்கிறது. இந்த வரிசையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் குறி வைத்துவிட்டதாம் பாஜக. இதனால்தான் மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பாஜகவுக்கு ஓடுவேன் என டெல்லியை மிரட்டுகிறாராம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.












Click it and Unblock the Notifications