லோக்சபாவில் "ஏர்செல்-மேக்சிஸ்" விவாதம்- ப.சி, கார்த்தி மீது நடவடிக்கை தேவை: அதிமுக வலியுறுத்தல்!!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்பி டிஜி வெங்கடேஷ்பாபு வலியுறுத்தினார்.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாகவும் 14 நாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் காட்டி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் இதுகுறித்து விவாதிக்க கோரி 2 நாட்களாக அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றும் இந்த அமளி தொடர்ந்த நிலையில் லோக்சபாவில் விவாதிக்க விதி எண்: 193-ன் கீழ் சபாநாயகர் அனுமதித்தார்.

ஆனால் பட்டியலில் இல்லாத ஒன்றை விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை பிஜூ ஜனதா தள எம்பி மெகதாப் தொடங்கி வைத்து பேசினார். அவர், கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் பட்டியலை முழுமையாக வாசித்தார்.
அத்துடன் உச்சநீதிமன்ற கண்காணிப்பிலே நடைபெறும் இவ்வழக்கை விரைந்து நடத்த வேண்டும்; அண்மையில் ப.சிதம்பரத்தை கேள்வி கேட்ட அதிகாரி ஒருவர் இடம்மாற்றம் செய்யப்பட்டார்; அப்படியானால் அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் சிதம்பரத்தை காப்பாற்றுகிறார்களா? என்றார்.
அவரைத் தொடர்ந்து அதிமுகவின் வடசென்னை எம்பி டிஜி வெங்கடேஷ் பாபு தமது விவாதத்தைத் தொடங்கினார். அவர் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடந்தது? என்பதை விரிவாக குறிப்பிட்டார்.
பின்னர் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு என்ன? அதில் என்ன முறைகேடு? மாறன் சகோதரர்களுக்கான தொடர்பு என்ன என்பதை விவரித்த அவர், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது பங்கு குறித்தும் விவரித்தார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு சட்டவிரோதமாகவே ப.சிதம்பரம் அனுமதி அளித்தார்; இதற்கு ஆதாயமாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு கிடைத்த பணமே 14 நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை விரைந்து நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டவிரோத சொத்துகளைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கூடா நட்பு கேடாய் முடியும் என அன்று காங்- திமுக உறவு குறித்து கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி; இதனால் லோக்சபா தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டு தோற்றது.
தற்போது சட்டசபை தேர்தலில் அதே கூடா நட்பான காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளார் கருணாநிதி. தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்; ஆகையால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications