மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவரை விடமுடியாது.. நிரவ் மோடி குறித்து வாய்திறந்த பிரதமர் மோடி!
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விட முடியாது என நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விட முடியாது என நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி தொடர்பாக நிரவ் மோடி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதுவும் பேசாத மோடி
வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள நிரவ் மோடியை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்தார்.
வாய்திறந்த மோடி
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் பிரதமர் மோடி நிரவ் மோடியின் மோசடி குறித்து வாய் திறந்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 4-வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நிதி முறைகேடுகள்
அப்போது பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் எச்சரித்தார். மேலும் நிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கக்கூடிய இடத்தில் இருப்போர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொறுப்புடன் செயல்படுங்கள்
தங்களது வேலையில் உள்ள நெறிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதேபோல் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.