தேர்தல் தேதி அறிவிக்காததால் லாபம்.. குஜராத்தில் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்ட பாஜக அரசு
சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்தா முதல்வர் விஜய் ரூபாணி.
காந்திநகர்: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவச மருத்துவம் என மக்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் முழுமையாக இறங்கி உள்ளது பா.ஜ.க. கடந்த 4 முறையும் அங்கு பா.ஜ.க தான் ஆட்சி செலுத்துகிறது. அதனால், இந்த முறையும் வெற்றி பெற வேண்டி தீவிரமாக வேலை செய்கின்றனர் பா.ஜ.க.
தேர்தல் தேதி அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திலும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டி உள்ளார் குஜராத் முதல்வர்.
குஜராத்தில் தேர்தல் எப்போது
குஜராத் மாநிலத்துக்கும், ஹிமாச்சல் பிரதேசத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ஹிமாச்சலில் தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. நவம்பர் முதல் வாரத்தில் தேர்தலும் வந்துவிட்டது. இன்னமும் குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் நேற்று சாடி இருந்தார்.
வியூகம் வகுக்கும் பா.ஜ.க
பிரதமர், பா.ஜ.க தலைவர் இருவருக்கும் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற ஆசை இருவருக்கும் இருக்கிறது. அதனால் முக்கியத் தலைவர்களையும் முடுக்கிவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பா.ஜ.க மீது சில அரசியல் நடவடிக்கைகளால் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மிகப்பெரிய ஓட்டு வங்கியான பட்டேல் சமூகமும் விரக்தியில் இருக்கிறது. இந்த சூழ்நிலைகளால் காங்கிரஸ் அங்கு வலுப்பெற்று வருகிறது.
சலுகைகளை அளித்தார் முதல்வர்
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இரு மடங்கு சம்பள உயர்வு. விவசாயிகளுக்கு 25 லட்சம் வரை வட்டியில்லா கடன், 2.5 லட்சம் வரை இலவச மருத்துவம, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை அமல் என பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகி இருக்கின்றன. மோடி விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அப்போதும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபத்தில் எதிர்க்கட்சிகள்
தேர்தல் தேதி அறிவித்து விட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது மக்களுக்கு இப்படி சலுகைகளை அறிவிக்க முடியாது என்பதால் வேண்டுமென்றே தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் கோபத்தில் இருக்கிறார்க்ள்