இது என்ன வாலா? விளையாட்டாக புலியை சீண்டிய விவசாயி! பாய்ந்து தாக்கியதில் பறிபோன உயிர்..ஷாக் வீடியோ
வேட்டையாடி உணவு தின்ற புலி ஓய்வெடுத்தபோது சந்தோஷ் குச்சியை எடுத்து அதன் வாலை தட்டிப்பார்த்தார்.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வேட்டையாடி உணவு தின்ற புலி அமைதியாக ஓய்வெடுத்த நிலையில் கிராமத்தினர் அதனை விரட்ட முயன்றனர். அப்போது விளையாட்டாக புலியின் வாலை விவசாயி குச்சியால் தட்டியதாகவும், அப்போது பாய்ந்து தாக்கியதில் விவசாயி ரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்று பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வனவிலங்குகளிடம் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். மாறாக வனவிலங்குகளுடனான விளையாட்டு என்பது வினையாக மாறிவிடும். இதில் பலர் படுகாயமடைந்து அதிர்ஷ்டவசமாக தப்பினாலும் கூட சிலர் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புலியை விளையாட்டாக சீண்டிய விவசாயி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:

புலி நடமாட்டம்
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள சிரியா வனப்பகுதி அருகே குஷியாலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கிராம மக்களில் சிலர் பீதியடைந்த நிலையில் சிலர் புலியை அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் புலியை பின்தொடர்ந்து அதனை விரட்டும் வகையில் துன்றுபுறுத்தியதாக கூறப்படுகிறது.

புலி தாக்கி விவசாயி பலி
இந்நிலையில் தான் குஷியாலா பகுதியை சேர்ந்த விவசாயியான சந்தோஷ் (வயது 35) என்பவர் புலியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது திடீரென்று புலி அவரை தாக்கியுள்ளது. அவரது கழுத்தில் தாவி புலி கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சி்கிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் இறந்துள்ளார்.

புலியை சீண்டியதால் கடித்தது
இந்நிலையில் தான் கிராம மக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். வீடுகளிலும் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விளையாட்டாக சந்தோஷ் புலியை சீண்டிய நிலையில் அது அவரை கடித்து கொன்றது தெரியவந்துள்ளது.

அதிகாரி விளக்கம்
இதுபற்றி பிகாங்கன் எஸ்டிஓ (வனம்) தினேஷ் வாஸஅகெல் விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மகாராஷ்டிரா மாநிலம் ஜலகான் மாவட்டத்தில் யாவால் வனச்சரணாலயம் உள்ளது. இங்கு புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கிருந்து தான் புலி வழிதவறி வந்திருக்கலாம். ஏனென்றால் அம்பா தோச்சார் பகுதியில் நுழைந்த புலி ஓய்வெடுத்துள்ளது. இந்த வேளையில் மக்கள் புலியை பார்த்துள்ளனர். இதையடுத்து விரட்ட சென்ற வனக்காவலரை புலி தாக்கியது. ஆனால் அவர் மரத்தின் மீது எறி தப்பித்தார்.

உண்மையில் நடந்தது என்ன?
அதன்பிறகு 12 கிலோமீட்டர் தூரம் பயணித்த புலி குஷியாலா கிராமத்தில் நுழைந்துள்ளது. அப்போது சந்தோஷ் புலியை சீண்டியுள்ளார். புலியை குச்சியால் குத்தினால் என்ன செய்யும்? அதன் ரியாக்சன் எப்படி இருக்கும்? என்பதை அறிய அவர் விரும்பினார். இதையடுத்து அவர் குச்சியால் புலியின் வாலை தட்டியுள்ளார். அப்போது புலி அவரை தாக்கி உள்ளது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்'' என்றார்.

வெளியான வீடியோ
இதற்கிடையே புலி தாக்கியதில் சந்தோஷ் ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தில் கையை வைத்துகொண்டு வயல்வெளிகளில் நடந்து செல்வதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் மருத்துவமனை சிகிச்சையின்போது அவர் பேசிய வீடியாவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications