சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற கோரி மத்திய பிரதேச அமைச்சரவையில் தீர்மானம்
போபால்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பிரதேச அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதேபாணியில் தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பஞ்சாப் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்திருந்தது.
தற்போது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். குறித்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பிரதேச அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய பிரதேச அமைச்சரவை கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications