தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தேர்வுக்காக 105 கி.மீ. தூரம் மகனை சைக்கிளில் அழைத்து வந்த தந்தை!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வை எழுதுவதற்கு பொது போக்குவரத்துகள் ஏதும் இயங்காததால் தனது மகனை சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு 105 கி.மீ. தூரம் பயணம் செய்த அவரது தந்தையின் அன்பு அப்பகுதியில் பாராட்டுக்குரியதாகியுள்ளது.
தார் மாவட்டத்தில் மனவார் தேசில் என்ற ஒரு குக்கிராமம் உள்ளது. இங்கு தினக்கூலியாக பணியாற்றுபவர் சோபாராம். இவரது மகன் ஆஷிஷ். இவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு துணை தேர்வு நடந்து வருகிறது.
ஆஷிஷும் முதல் முறை நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி அடையாததால் கணிதம், சமூக அறிவியல் தேர்வுகளை எழுத வேண்டியிருந்தது. இதனால் ஆஷிஷ் இந்த முறை எப்படியாவது தேர்ச்சி அடைய வேண்டும் என்பதே சோபாராமின் லட்சியமாக கொண்டிருந்தார்.

போக்குவரத்து
105 கி.மீ. தூரம் கொண்ட அரசு போஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தத் தேர்வுக்கு செல்ல கொரோனாவால் எந்த பேருந்து போக்குவரத்தும் இல்லை. இவர்களிடம் இரு சக்கர வாகனமும் இல்லை. இந்த முறை 10ஆம் வகுப்பு தேர்வை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற இலக்கு மட்டுமே சோபாராமுக்கு இருந்தது.

தேர்வு எழுத
இதையடுத்து அவர் தன்னிடம் உள்ள சைக்கிளில் தனது மகனை உட்கார வைத்து 105 கி.மீ. தூரம் செல்ல முடிவு செய்துவிட்டார். இரு தேர்வுகள் என்பதால் போக வர சேர்த்து 400 கி.மீ. தூரம் ஆகும் என்பதால் அங்கேயே தங்கி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்ப முடிவு செய்தனர். இதற்காக ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஆவது போல் உணவு பொருட்களை கொண்டு வந்துவிட்டனர்.

மகன்
உணவு பொருட்கள், மகனையும் அழைத்து கொண்டு திங்கள்கிழமை காலை தனது குக்கிராமத்தில் இருந்து புறப்பட்ட சோபாராம், செவ்வாய்க்கிழமை காலை தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தை அடைந்தார். இதுகுறித்து சோபாராம் கூறுகையில் நானோ ஒரு கூலித் தொழிலாளி. எனது மகனுக்காவது நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஏழை தொழிலாளி
அவன் தேர்வு எழுத கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பிற்கு எந்தத் தடையும் ஏற்படக் கூடாது என நினைத்தேன். அதனால்தான் நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என சைக்கிளில் அழைத்து வந்தேன் என்றார். தனது மகனின் 10-ஆம் வகுப்பு தேர்வுக்காக பேருந்தை நம்பி இருக்காமல் தனது சைக்கிளிலேயே மகனை உட்காரவைத்து அழைத்து சென்ற ஏழைத் தொழிலாளிக்கு கல்வி மீது இருந்த பக்தியையும் மகனின் எதிர்காலத்தின் மீது இருந்த அக்கறையையும் நினைத்து அனைவரும் மெச்சினர்.












Click it and Unblock the Notifications