மகாராஷ்டிராவையடுத்து மத்திய பிரதேசத்தில் பரபர.. காங். முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கிளர்ச்சி?
Recommended Video
போபால்: மகாராஷ்டிராவில் நடைபெற்ற அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு நடுவே அடுத்ததாக மத்திய பிரதேசத்திலும் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பாஜக 109 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில், சமாஜ்வாடியின் 1 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்களும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து, கடந்த வருடம் டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வர் பதவிக்கான போட்டியில், காங்கிரஸ் கட்சியின், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில் இருந்தார். ஆனால் இவருக்கு வாய்ப்பு வழங்காமல் மூத்த தலைவரான கமல்நாத் முதல்வராக அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்தார்.
முன்னதாக, இதற்காக நீண்ட ஆலோசனைகளை அவர் நடத்தினார். இருவரையும் டெல்லிக்கு அழைத்து வர வைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்ந்து அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா திடீரென தனது ட்விட்டர் கணக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்த வரிகளை நீக்கியுள்ளார்.
டுவிட்டர் கணக்கில், பொது சேவையாளர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டுமே எழுதியுள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சிக்குள், அதிருப்தி பெரிய அளவில் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறினார். அதேபோல ஜோதிராதித்ய சிந்தியா ஏதேனும் சித்துவேலைகளில் ஈடுபடுகிறாரா என்ற பரபரப்பு, காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதேநேரம், இந்த யூகங்களை ஜோதிராதித்ய சிந்தியா மறுத்துள்ளார். பயோ சின்னதாக இருக்க வேண்டும் என்பதற்காக மாற்றினேனே தவிர, உள்நோக்கம் இல்லை என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications