ராமர் கோவில் பாஜகவுக்குதான் சொந்தமில்லை..பூட்டை உடைத்து வழிபட சொன்னவரே ராஜீவ்தான்.. கமல்நாத் பொளேர்
போபால்: அயோத்தி ராமர் கோவில் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமில்லை; 1986-ல் பூட்டப்பட்டிருந்த அயோத்தி தற்காலிக ராமர் கோவிலின் பூட்டுகளை உடைத்து இந்துக்களை வழிபட செய்ததே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது கருத்து கணிப்பு முடிவுகள்.

மத்திய பிரதேச தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு கமல்நாத் அளித்த பேட்டி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாஜக மட்டுமே உரிமை கோர முடியாது. அயோத்தி பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பையும் நாம் மறந்துவிட முடியாது. பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்காலிக ராமர் கோவில் பூட்டு போடப்பட்டிருந்தது. அந்த பூட்டை உடைத்தவரே ராஜீவ் காந்திதான். ஆகையால் வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. அயோத்தி ராமர் கோவில், பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ள கோவில் அயோத்தி ராமர் கோவில். ஆனால் பாஜகவோ தமது சொந்த சொத்தாக உரிமை கோர முயற்சிக்கிறது. இப்போது அரசாங்கத்தில் பாஜக இருக்கிறது; அதனால் நிதி ஒதுக்கீடு செய்து ராமர் கோவிலை கட்டுகிறது அவ்வளவுதான்.
இந்துத்துவா செயல்பாடுகள்: இலங்கையில் சீதையின் கோவிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். நாட்டின் நம்பிக்கை, கலாசாரத்துக்கு சேவையாற்றுவது என்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் சீதை கோவிலை கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுதான் சீதை கோவில் கட்டுமானத்தை நிறுத்தியது. இந்துத்துவா, தீவிர இந்துத்துவா, மென்மை இந்துத்துவா என்பதற்கான வரையறையை நாம் சொல்ல முடியாது. மதநம்பிக்கை என்பது பின்பற்றி வருவதைப் பொறுத்தவரை; பிரசாரங்களால் வருவது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்த்வாராவில் 101 அடி உயர ஹனுமான் சிலையை நிறுவினேன். அதேபோல ரூ455 கோடியில் ஓம்கரேஸ்வர் கோவில் உள்ளிட்டவைகளை நிர்மாணித்தோம்.
ராஜீவ் காந்தியும் அயோத்தி பிரச்சனையும்: 1949-ல் பாபர் மசூதிக்குள் கடவுள் சிலைகள் வைக்கப்பட்ட போது சர்ச்சையாக வெடித்தது. அப்போது சர்ச்சையை கட்டுப்படுத்த தற்காலிக ராமர் கோவிலில் பூட்டுகள் பூடப்பட்டன. இந்தப் பூட்டுகளை உடைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்பது பல்லாண்டு கால கோரிக்கை. 1984-ம் ஆண்டு இதே கோரிக்கைக்காக ரத யாத்திரையும் நடந்தது. அப்போது சீக்கியர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை நிகழ்ந்ததால் ரத யாத்திரையும் ரத்து செய்யப்பட்டது. இந்திராவுக்கு பின் ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார்.
ராமர் கோவில் பூட்டு உடைத்த ராஜீவ் காந்தி: ராஜீவ் பிரதமராக இருந்த காலத்தில்தான் புகழ்பெற்ற ஷாபானு வழக்கு விவகாரம் பேசுபொருளாக இருந்தது. தலாக் சொல்லி தம்மை விவகாரத்து செய்த கணவரிடம் ஜீவனாம்சம் கோரி ஷா பானு தொடர்ந்த வழக்கு அது. அப்போது ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இத் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அழுத்தத்தை ஏற்று முஸ்லிம் பெண்களுக்கான ஜீவனாம்சம் தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தாக்கல் செய்தார். இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த கொந்தளிப்பான தருணத்தில்தான் அயோத்தி ராமர் கோவில் பக்கம் கவனத்தை செலுத்தினார் ராஜீவ் காந்தி. 1986-ல் அயோத்தி ராமர் கோவில் பூட்டுகளை திறக்க கோரி போராட்டங்கள் நடந்தன. அப்போது இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கிறது காங்கிரஸ் என்பதை வெளிப்படுத்த அயோத்தி தற்காலிக ராமர் கோவில் பூட்டை உடைத்தது ராஜீவ் காந்தி அரசு. இதன் பின்னர்தான் அயோத்தி ராமர் கோவில் கட்டும் விவகாரம், பாபர் மசூதி இடிப்பு என அத்தனையுமே உத்வேகம் கொண்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக ரத யாத்திரை நடத்தியதும் இதன் பின்னர்தான். 1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தையே அயோத்தியில் இருந்துதான் தொடங்கினார் ராஜீவ் காந்து. அப்போது மத்தியில் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தார். பாபர் மசூதிக்கு பாதிப்பு ஏற்படாமல் ராமர் கோவில் கட்டுவோம் எனவும் தேர்தல் வாக்குறுதி தந்தவர் ராஜீவ் காந்தி. 1992-ம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பின்னரான வன்முறைகள், உயிரிழப்புகள் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை தந்தது.
காங்கிரஸ் இடைவிடாத முயற்சி: என்னதான் ராஜீவ் காந்தி பூட்டை உடைத்து ராமர் கோவில் கட்டுமான விவகாரத்துக்கு அடித்தளமாக இருந்தாலும் அறுவடை செய்வது பாஜகதான். அதனால்தான் இன்னமும் சத்தீஸ்கர், ம.பி. மாநிலங்களில் ராமர் வனவாசம் போன இடங்களுக்கு சுற்றுலா திட்டம், இலங்கையில் சீதை கோவில் என இந்துத்துவா கொள்கைகளை தூக்கிப் பிடிக்க முயற்சிக்கிறது. 2020-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நிகழ்வு நடந்த போது கமல்நாத், ஹனுமான் பிரார்த்தனை நடத்தியவர். அயோத்தி ராமர் கோவிலுக்கு 11 வெள்ளி செங்கல் அனுப்புவதாகவும் அறிவித்தவர் கமல்நாத்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications