மாணவர்களுக்கு தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்தது ஒரு குத்தமா?: மதரஸா தலைமை ஆசியரை தாக்கிய மவுலவிகள்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள மதரஸா ஒன்றின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு இந்திய தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்ததற்காக மவுலானாக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அரசு அங்கீகாரம் பெற்ற தல்புகுர் ஆரா மதரஸா. அங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் காசி மசும் அக்தர். பேண்ட், சட்டை போட்டு தாடியில்லாமல் இருக்கும் அவரை மவுலவிகளுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் அக்தர் மாணவர்களுக்கு இந்திய தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்ததற்காக மவுலவிகளால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மதரஸாவுக்குள் நுழைய தடை விதித்து மவுலவிகள் பத்வா விட்டுள்ளனர். அவர் பிற மவுலவிகளை போன்று குர்தா போட்டு, தாடி வளர்க்குமாறும் கூறியுள்ளனர்.
தாடியின் அளவை வார, வாரம் புகைப்படம் எடுத்து அனுப்புமாறும் கூறியுள்ளனர். தேசிய கீதத்தை எழுதிய ரபிந்திரநாத் தாகூர் பிறந்த மண்ணில் தேசிய கீதத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் கடந்த மார்ச் மாதம் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டு மாதக் கணக்கில் மருத்துவமனையில் இருந்தார். அவர் பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மவுலவிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அக்தர் தனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி போலீசார், முதல்வர் மமதா, ஆளுநர், சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை.












Click it and Unblock the Notifications