மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு: நெஸ்லே தலை தப்புமா?
டெல்லி: மேகி நூடுல்ஸ் மாதிரியை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற ரசாயன உப்பும், ஈயமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இந்த ரசாயன உப்பு மற்றும் ஈயத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் உள்ள பாரபங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஈயம்
மேகி நூடுல்ஸ் குறித்து ஆய்வு நடத்திய உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் அதில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

விசாரணை
மேகி நூடுல்ஸ் விவகாரத்தை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்(எப்எஸ்எஸ்ஏஐ) தன் கையில் எடுத்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்.

நூடுல்ஸ்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் சேகரித்து ஆய்வை துவங்கியுள்ளது. சில மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இன்று வரக்கூடும். மீதமுள்ள மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரி முடிவுகள் இன்னும் 2-3 நாட்களில் வரும்.

நடவடிக்கை
மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அதிக அளவில் இருப்பது உறுதியானால் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்படும். இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களை ஏமாற்றும் வகையில் இருந்த மேகி விளம்பரம் குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது என்றார் பாஸ்வான்.












Click it and Unblock the Notifications