மகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி!
Recommended Video
நாசிக்: மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது ராமர் கோவில் விவகாரத்தை முன்வைத்து கூட்டணி கட்சியான சிவசேனாவை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியிருப்பது அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் தேதி ஓரிருநாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை பெரும் இழுபறியாக இருக்கிறது.
288 தொகுதிகளில் சரிபாதி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பது சிவசேனாவின் நிபந்தனை. ஆனால் 120 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட இல்லை என்கிறது பாஜக. இதனால் இந்த கூட்டணி உடையக் கூடும் என தெரிகிறது.

மோடி பிரசாரம்
இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் பிரதமர் மோடி இன்று சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது ராமர் கோவில் விவகாரத்தை முன்வைத்து கூட்டணி கட்சியான சிவசேனாவை மறைமுகமாக சாடினார் பிரதமர் மோடி.

சிவசேனாவை விளாசிய மோடி
ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

குப்பை போல பேசுகிறார்கள்
ராமர் கோவில் பிரச்சனையில் சிலர் குப்பை போல பேசிவருகின்றனர். நமது நாட்டு மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நாம் நமது உச்சநீதிமன்றத்தை மதிக்க வேண்டும்.

அதிகபிரசங்கித்தனமான பேச்சு
ராமர் கோவில் விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அதிகபிரசங்கித்தனமாக பேசுகின்றனர். அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ராமரின் பெயரால் அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மோடியின் இந்த பேச்சு சிவசேனாவை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியதால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications