மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. பாஜக கூட ஹாயாக இருக்கலாம்.. உண்மையில் காங்கிரசுக்குதான் அக்னி பரிட்சை
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க முடியவில்லை என்பது உண்மைதான், ஆனாலும், காங்கிரஸுக்குதான் இப்போது அக்னி பரிட்சை காத்துக் கொண்டிருக்கிறது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களிடம் போதிய பலம் இல்லை என்று கூறி அழைப்பை நிராகரித்து விட்டது பாஜக.
இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ்
சிவசேனா மலைபோல் நம்பி கொண்டிருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியை தான். சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எனவே சிவசேனா உடன் தேசியவாத காங்கிரஸ் மட்டும் கூட்டணி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என கருதும் சரத்பவார், காங்கிரஸ் இந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது.
காங்கிரசின் சிக்கல்
காங்கிரஸ் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில், இரு பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒன்று சிவசேனா, தீவிர இந்துத்துவ ஆதரவு கட்சியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மதசார்பின்மை பேசக்கூடிய ஒரு கட்சியாக அடையாளம் காணப்படுகிறது. அந்தக் கட்சியின் வாக்கு வங்கி என்பது சிறுபான்மையினர் மற்றும் மதசார்பின்மைவாதிகள் தான். இப்போது சிவசேனா உடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் அந்த வாக்கு வங்கியை இழக்க நேரிடும். இது வரலாறு முழுக்க சொல்லி காட்டப்படும் ஒரு சம்பவமாகவும், மாறிவிடும்.
வாக்கு வங்கி
ஒரு பக்கம் இந்து வாக்கு வங்கியை பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இருக்கக்கூடிய பிற வாக்கு வங்கியையும் இழந்தால், காங்கிரஸ், திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கிக் கொள்ளும் நிலைமை உருவாகும். எனவேதான் எதிர்கட்சி வரிசையில் இருக்க விரும்புவதாக சோனியா காந்தி தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி வருகின்றார். ஆனால் இங்குதான் மற்றொரு சிக்கல் காங்கிரசுக்கு எழுகிறது.
குடியரசு தலைவர் ஆட்சி
எப்படியாவது ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். யாருமே ஆட்சி அமைக்காவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ஆகும். பிறகு ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிவரும். மறுபடியும் செலவு செய்து தேர்தலை சந்திக்க வேண்டுமா என்ற கேள்வி அவர்களிடம் எழுகிறது. ஒருவேளை போட்டியிட்டாலும் வெற்றி சாத்தியமா, என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே ஆட்சியில் அங்கம் வகிப்பதுதான் புத்திசாலித்தனம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
பிம்பம் என்னவாகும்?
ஒருவேளை, காங்கிரஸ் தலைமை சம்மதிக்காவிட்டால் கூட, நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுவதற்கு சுமார் 36 எம்எல்ஏக்களாவது தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 44 எம்எல்ஏக்களில் 36 பேர் இவ்வாறு செய்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே வேறு வழியின்றி, சோனியாகாந்தி இந்த கூட்டணிக்கு சம்மதித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான பிம்பத்தை எப்படி கொண்டு செல்லும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.