ஒரே ஒரு நிபந்தனையை ஏற்றால் ஆதரவு... பாஜகவிடம் டீல் பேசும் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 122 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் கூட்டணி அமைத்தோ அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவுடனோ அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.

இது தொடர்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், 'பா.ஜ., அரசு அமைத்தால், அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தர தயார்; மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்' எனத் தெரிவித்துள்ளது. ஆனால், தேசியவாத காங்கிரசின் ஆதரவுக்கு, பா.ஜ., தரப்பில், இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெறுவதை விட, தொகுதிப் பங்கீடு நேரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கூட்டணியிலிருந்து பிரிந்த சிவசேனாவின் ஆதரவை மீண்டும் பெறலாம் என பாஜக நினைப்பதாவும், அதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சிவசேனா மூத்ததலைவர்களான, அனில் மற்றும் சுபாஷ் தேசாய் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் பாஜக மூத்தத் தலைவர் மாத்தூரை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, பாஜகக்கு ஆதரவு தர அவர்கள் ஒரே ஒரு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, 'எந்த சூழ்நிலையிலும், மகாராஷ்டிராவை பிரிக்கக் கூடாது; ஒன்றுபட்ட மகாராஷ்டிராவை தொடர வேண்டும்' என்ற ஒரே ஒரு நிபந்தனைக்கு பாஜக சம்மதம் தெரிவித்தால், தங்களுடைய ஆதரவைத் தருவதாக' அப்போது அவர்கள் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பிற்குப் பின் உடனடியாக மும்பை திரும்பிய சிவசேனா தலைவர்கள் நேற்று காலை தங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் இது குறித்த விபரங்களை தெரிவித்துள்ளனர்.
சிவசேனாவின் நிபந்தனைக்கு பாஜக ஒத்துக் கொண்டால் மட்டுமே ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications