"நாங்க திரும்பி கூட பார்க்கல.." நொடியில் உருக்குலைந்த அமைதி! பஹல்காமில் உயிர் பிழைத்தவர் திக்திக்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்றைய தினம் நடந்த கொடூரத் தாக்குதல் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுற்றுலாவுக்குச் சென்ற அப்பாவி மக்களைத் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதற்கிடையே தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தப்பிய சுற்றுலாப் பயணிகள் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் நேற்றைய தினம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அங்குப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

காஷ்மீர் தாக்குதல்
தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு உலகெங்கும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். தேசிய புலனாய்வு படை தாக்குதல் குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதி நூலிழையில் தப்பித்துள்ளனர். இவர்கள் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. அந்த இடம் முழுக்க நீண்ட நேரம் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் குடும்பத்தினரைக் காப்பாற்ற அங்கிருந்து ஓடித் தப்பித்ததாகவும் நாக்பூரைச் சேர்ந்த அந்தத் தம்பதி குறிப்பிடுகின்றனர்.
சில நிமிடங்களில் தாக்குதல்
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தாக்குதல் நடந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேறிய சில நிமிடங்களே ஆன நிலையில், திடீரென இந்தத் தாக்குதல் நடந்தது. நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் தப்பிக்க முயன்றனர். நாங்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
திரும்பிக் கூட பார்க்கவில்லை
துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால்.. அங்கிருந்து வெளியேறினால் போதும் என்றே நினைத்தோம். நாங்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அப்படியே அங்கிருந்து ஓடிவிட்டோம். அங்கு வெளியேறும் கதவு ரொம்பவே சின்னது. சுமார் 4 அடி மட்டுமே இருக்கும். ஒரே நேரத்தில் பலரும் வெளியேற முயன்றதால் அங்கும் குழப்பம் இருந்தது. எனது மனைவிக்கும் மகனுக்கும் எதாவது ஆபத்து ஏற்படுமோ என அஞ்சினேன். அங்கிருந்த நெரிசலில் எனது மனைவிக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது" என்றார்.
குழந்தைகள் பயந்துவிட்டனர்
எலும்பு முறிவு காரணமாகத் தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் குறித்து அந்தப் பெண் கூறுகையில், "எல்லாம் நன்றாக இருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. எல்லாரும் பயத்தில் கத்தத் தொடங்கினர். துப்பாக்கிச் சூடு நடப்பதாகக் கத்திக்கொண்டே ஓடினர்.
வெளியேறும் கதவில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. எங்களைப் பின்னால் இருந்து பலரும் தள்ளினர். குழந்தைகளும் அங்கு அச்சத்தில் இருந்தனர். நாங்கள் தப்பித்தால் போதும் எனத் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவந்துவிட்டோம். அங்கிருந்து வெளியேறுவது ரொம்பவே கடினமாக இருந்தது" என்றார்.
பார்க்கவே பயங்கரமாக இருந்தது
இந்தத் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் மக்கள் அங்கு உதவிக்கு விரைந்துள்ளனர். அங்குக் கண்ட காட்சி மிக மோசமாக இருந்ததாகச் சுற்றுலா வழிகாட்டி வஹீத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் அங்குச் சென்றபோது பலரும் அப்படியே தரையில் கிடந்தனர். அந்தக் காட்சியைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது" என்றார்.
காஷ்மீரில் நடந்த இந்தத் தீவிரவாத தாக்குதல் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி உட்பட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications