மகாராஷ்டிராவில் 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக 'தாய் மதமான' புத்த மதத்துக்கு திரும்ப அதிரடி முடிவு!!
மும்பை: மகாராஷ்டிராவில் 2016ஆம் ஆண்டு 5 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்தமதத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைந்தது முதல் மதமாற்ற விவகாரம் விஸ்வபரூமெடுத்து வருகிறது. கிறிஸ்துவம், முஸ்லிம் மதங்களைப் பின்பற்றுவோரை மீண்டும் தாய் மதத்துக்குக் கொண்டு வருகிறோம் என்று கூறி கட்டாய மதமாற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

இது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 5 லட்சம் பேர் 2016ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்த மதத்துக்குத் திரும்பப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் பரிஷத் நிர்வாகி ஹனுமந்த் உபாரே கூறியதாவது:
நாங்கள் அடிப்படையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது இந்துக்களாக இருக்கிறோம். நாங்கள் மதம் மாறவில்லை. நாங்கள் மீண்டும் எங்கள் தாய் மதத்துக்குத் திரும்புகிறோம்.
இதுதான் உண்மையான கார் வாப்சி என்பதாகும். 2011ஆம் ஆண்டே புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக அறிவித்திருக்கிறோம். இதுவரை 7 ஆயிரம் பேர் புத்த மதத்தைத் தழுவ பதிவு செய்துள்ளனர்.
கி.பி. 19ஆம் நூற்றாண்டில் நாங்கள் கட்டாயமாக இந்துக்களாக்கப்பட்டோம். இருந்தாலும் நாங்கள் "சூத்திரர்களாக" நடத்தப்பட்டோம். தற்போது இந்து அமைப்பு முறையில் எங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தராது.
இதனாலேயே இந்து அமைப்பு முறையை உடைத்துக் கொண்டு வெளியேறி மீண்டும் எங்கள் தாய் மதமான புத்தமதத்துக்கே திரும்ப இருக்கிறோம். 2016ஆம் ஆண்டு 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக புத்த மதத்தைத் தழுவ உள்ளோம்.
இவ்வாறு ஹனுமந்த் உபாரே கூறினார்.












Click it and Unblock the Notifications